சென்னை, ஏப். 26 - அரசு ஊழியர்களிடம் பறிக்கப்பட்ட சலுகைகளை, உரிமைகளை தேர்தல் வாக்குறுதிபடி வழங்க வலியுறுத்தி புதனன்று (ஏப்.26) மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதன் ஒருபகுதியாக வடசென்னை மாவட்டம் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அகவிலைப்படியை உரிய காலத்தில் வழங்க வேண்டும், சரண் விடுப்பை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் முழக்கமிட்டனர். இந்தப்போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவரும், போராட்டக்குழு அமைப்பாளருமான மு.அன்பரசு பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பறிக்கப்பட்ட சலுகைகளை வழங்க கோரி, மாநிலம் முழுவதும் 64 துறை சங்கங்களை உள்ளடக்கிய போராட்டக்குழு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலிப் பணியிடங்களை நிரப்பாததால், அரசு ஊழியர்கள் 12 மணி நேரம் வரை வேலை செய்கின்றனர். கொரோனா காலத்தைத் தொடர்ந்து பறிக்கப்பட்ட சலுகைகளால் 25 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை ஒரு ஊழியருக்கு இழப்பு ஏற்படுகிறது. பறிக்கப்பட்ட சலுகைகளை, அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்தப் போராட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் வடசென்னை மாவட்டச் செயலாளர் அந்தோணி சாமி, பொருளாளர் ஏழுமலை, நிர்வாகி சிவக்குமார், சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.சீனிவாசலு உள்ளிட்டோர் பேசினர்.