tamilnadu

img

தேவையற்ற தாமதம் போக்கப்படுமா?

நீடா சுப்பையா  மத்திய இடைநிலைக் கல்வி வாரி யத்தின் (சிபிஎஸ்இ) தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி இன்னமும் அறிவிக்கப் படவில்லை. ஜூலை இறுதியில் வெளியிடு வதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் மேலும் தாமத மாவதற்கும் வாய்ப்பு உள்ளது என்றும்  இரு வேறு தகவல்கள் வருகின்றன.  இந்நிலையில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்  அறிவிக்கப்பட்டு  5 நாட்களுக்கு  பின்னர் தான்   கல்லூரி இளநிலை பட்டப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தப்பட்டு முடிக்கப்படும் என்றும் அதன் பின்னர்தான் கல்லூரி சேர்க்கை துவங்கும் என உயர்கல்வி வட்டார செய்திகள்  கிடைத்துள்ளன.  18.7.2022 முடிய தமிழ்நாட்டில் மொத்தம் 163 அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 95 விழுக்காடு ஏழை, எளிய, நடுத்தர குடு்ம்பங்களைச் சேர்ந்த மாணவர்கள்தான் படிக்கிறார்கள். குறிப்பாக கிராமப்புற மற்றும் புறநகர் மாணவர்கள்தான் இந்த அரசு கல்லூரிகளில் படிக்கின்றனர். இக்கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையில் கடந்த ஆண்டு பெறப்பட்ட 2,29,000 விண்ணப்பங்களில் 800 மட்டுமே சிபிஎஸ்இ பிரிவிலிருந்து பெறப்பட்டது. 

இவர்கள் அனைவரும் விண்ணப்பித்த கல்லூரிகளில் சேர்ந்தார்களா என்பதும் சந்தேகம்தான். டெல்டா மாவட்டங்களின் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில்  சராசரியாக இரண்டு மாணவர்கள்தான் ஒரு கல்லூரியில்  சிபிஎஸ்இ படிப்பை முடித்து படித்து வருகிறார்கள். சில கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட இல்லை என்ற நிலையும்  உள்ளது. இப்படிப்பட்ட உயர்கல்வி அனுபவச் சூழ்நிலையில் சிபிஎஸ்இ தேர்வின் முடிவிற்கான அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை மேலும் காலம் கடத்திக் கொண்டுபோவது, மேலும் நடப்பு கல்வியாண்டில் வகுப்பறை நாட்கள் குறைவதற்கும் தாமதமான மாணவர் சேர்க்கையால் பல தொடர் விளைவுகள் நேர்வதற்கு  கல்வியாண்டில் வாய்ப்புகள் ஏற்படும்.   ஒவ்வொரு கல்வியாண்டிலும் சுமார் 20 சதவீத மாணவர் எண்ணிக்கை எல்லா கல்லூரிகளிலும் அதிகரிக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டும் அவ்வாறே நடைபெறவிருக்கிறது என்ற செய்தியும் கிடைத்துள்ளது. அதிகரிக்கப்படவிருக்கும் இந்த சேரக்கை இடங்களில் முன்னுரிமை அடிப்படையில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு அளிக்கலாம்.  அவ்வாறே முடிவெடுத்து உடனே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை துவங்க இனியும் காலம் தாழ்த்தாமல் மாநில அரசு அறிவிக்க வேண்டும். இதுதான் கல்வியாளர்களின், இதுவரை விண்ணப்பம் செய்திருக்கும் மாணவர்கள் உள்பட அனைவரின் எதிர்பார்ப்பாகும். கடந்த 2021 ஜூன் இறுதியில் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி ஜூலை 2021க்குள் சிபிஎஸ்இ தேர்விற்காக காத்திருப்பதாக அறிவித்தார். இப்போதும் கடந்த ஆண்டைப்போல அதே தவறுதான் அரங்கேறிவருகிறது. நீண்டகாலம் தமிழ்நாட்டின் அனைத்துத் துறைகளும் அதிமுக ஆட்சியில் குளறுபடியான நிர்வாகத்தால் மூச்சுத் திணறி வந்தன. 

அதிலிருந்து புது முன்னேற்றம் நிம்மதி திமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் இப்போது ஏற்பட்டு வருகிறது. அரசு வழங்கும் உயர்கல்வி ஏழை மாணவர்களின் எதிர்காலத்திற்கான  அறிவுத் திறவுகோல் என்பதால் மாநில அரசு கல்வித்துறையில் உயர் அதிகாரிகளின் ஒவ்வொரு ஆலோசனையையும் தீர ஆராய்ந்து முடிவு செய்வது மிக அவசியமாகும். இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) தேர்வு முடிவுகள் தயாராகிவிட்டதாகவும் எந்த காரணத்திற்காக தாமதிக்கப்படுகிறது என்பது தெரியவில்லை என்றும் தனியார் கல்லூரிகளின் வியாபாரிகள் கிட்டத்தட்ட புதிய மாணவர் சேர்க்கையை சத்தம்போடாமல் முடித்துவிட்டதாகவும்   தகவல்கள் கூறுகின்றன.  மற்றொன்றையும் இத்தருணத்தில் குறிப்பிடவேண்டியது அவசியமாகும். கல்வி ஒன்றிய அரசு, மாநில அரசின் ஒத்திசைவு பட்டியலில் இருப்பதால்தான் சிபிஎஸ்இ தேர்வு தாமதம் போன்ற குளறுபடிகள் புதிது புதிதாய் ஏற்படுகின்றன அல்லது உருவாக்கப்படுகின்றன. மாநிலப் பள்ளிகள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பள்ளிகள், சர்வதேச கல்லூரிகள் என்று பெரும்பான்மை ஏழை மக்களை கொண்டிருக்கும் நம் நாட்டில் பொருத்தமற்ற கல்வியியல் சூழல் உருவாகி வருகிறது.  மாணவர்களின் மன அழுத்தம், தற்கொலை, குடும்பங்களின் பொருளாதாரச் சிதைவு போன்ற அவலங்கள் நடைபெறுகின்றன.  முற்றிலும் மாநில அரசின் பொறுப்பில் கல்வி இருந்தால் இதுபோன்ற குளறுபடிகள் குறையும். ஏழைகளுக்கான தரமான விலையில்லா கல்வி அவர்களுக்கு எட்டும் தூரத்தில் கிடைக்கும்.  சிபிஎஸ்இ தேர்வு முடிவிற்காக காத்திருப்பது இனியும் சரியல்ல. இந்த தாமதம் தனியார் கல்லூரிகளின் கல்லாப்பெட்டியை  நிரப்புவதற்குத்தான் பயன்படும். உடனே சேர்க்கையை துவங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.