நடிகர் சிவாஜி சிலை மீண்டும் புத்தூருக்கு இடமாற்றம்
முதலமைச்சர் திறந்து வைக்கிறார்
திருச்சிராப்பள்ளி, மே 6 - திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் செவ்வாயன்று அவசர கூட்டம் நடைபெற்றது. மேயர் அன்பழகன் தலைமை வகித்தார். துணை மேயர் திவ்யா தனக்கோடி முன்னிலை வகித்தார். இதில் துணை ஆணையர் பாலு, மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன், ஜெய நிர்மலா மற்றும் நகர்மன்ற அலுவலர், செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், புத்தூர் ஈ.வி.ஆர். சாலை பகுதியில் 64.58 சதுர அடி பரப்பளவில் அரசு வழிகாட்டுதல் மற்றும் விதிகளுக்குட்பட்டு, மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உருவச் சிலை நிறுவப்பட உள்ளது. அந்த இடத்தை அதன் உரிமையாளர்கள் மரகதம், பூரணி, தரணி ஆகியோர் தானமாக மாநகராட்சி மேயர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து தந்துள்ளனர். சிலை அமைத்தல், பராமரித்தலுக்கான முழு செலவையும் சிலை அமைக்க கோரும் மேயர் அன்பழகனே ஏற்றுக் கொள்ள வேண்டும். வெண்கலத்தால் ஆன சிலையை மட்டுமே அமைக்க வேண்டும். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை மற்றும் காவல்துறை அனுமதியுடன் சிலை அமைப்பதற்கு அரசு அனுமதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே, பாலக்கரை ரவுண்டானா பகுதியில் 2009 இல் நடிகர் சிவாஜி கணேசனின் முழு உருவச் சிலை அமைக்கப்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவின் காரணமாக சிலை திறக்கப்படாமல் மூடப்பட்டது. பின்னர் மாநகராட்சி நிர்வாகம் அந்த சிலையை இடமாற்றம் செய்து, சோனா மீனா தியேட்டர் எதிரில் உள்ள ரவுண்டானாவில் சில தினங்களுக்கு முன்பு நிறுவினர். இந்நிலையில் எதிர்ப்பின் காரணமாக, மீண்டும் அந்த சிலை அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு புத்தூரில், தனிநபரின் இடத்தில் அமைக்கப்பட உள்ளது. இதற்கிடையில் திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை அருகில் தானமாக தனியாரிடம் பெறப்பட்ட இடத்தில் சிலை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சிலை அமைக்கும் பணிகள் வியாழனன்று மாலைக்குள் முடிவடைந்து விடும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். திருச்சிக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணமாக வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த சிலையை திறந்து வைக்க உள்ளார் என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.