சென்னை, பிப். 26- உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த குடும்பத்தினரை மீட்பதற்காக சென்னை எழிலகத்தில் புதிய கட்டுப்பாட்டு மையத்தை தமிழக முதல மைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து அங்குள்ள மாணவர்களிடம் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசி, அவர்களுக்கு தேவையான உதவிகளை கேட்டறிந்தார். அதேபோல் விரைவில் அவர்களை மீட்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். இதுதொடர்பாக அயலக தமிழர்கள் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையரும், உக்ரைனில் உள்ள மாணவர்கள் மற்றும் தமிழர்களை மீட்க அமைக்கப்பட்ட குழுவின் தொடர்பு அலுவலருமான ஜெசிந்தா லாசரஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வர் கட்டுப்பாட்டு அறையை நேரில் ஆய்வு செய்ததாகவும், இதுவரை 1,800 அழைப்புகள் உக்ரைனில் இருந்து வந்திருக்கிறது என்றும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி இ.மெயில் மூலம் 3 ஆயிரம் பேர் தகவல்கள் அனுப்பி உள்ளதாகவும், அனைத்தையும் வெளியுறவு துறைக்கும் தகவல் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், உக்ரைன் நாட்டில் இருக்கும் மாணவர்கள் ழுவாகவும், பாதுகாப்பாகவும் இருக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறினார். இந்நிலையில் ரூமேனியா, போலாந்து போன்று அருகில் இருக்கும் நாடுகள் மூலம் மீட்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அங்கு இருக்கும் பல்கலைக்கழகம் உதவியுடன் மாணவர்களை விமான நிலையம் கொண்டு வந்து, பிறகு விமானம் மூலம் இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.