tamilnadu

img

“ சிரியாச் சிறுவனே சிரியா குழந்தையே” - கணக்கன்பட்டி சு.கணேசன்

பழனி சோ.முத்துமாணிக்கத்தின் ‘முத்தத்தின் பிரம்படி’ எனும் கவிதை புத்தகத்தில் சிறுவனின் துயரத்தைச் சொல்லும் வரி இது. புத்தகத்தின் தலைப்பே சிந்தனையைத் தூண்டிவிடும் வகையில் அமைந்துள்ளது. இதுவரை நாம் கண்டு கேட்டு உண்டு உணர்ந்து உற்றறியும் வகையில் முத்தத்திற்கு இணையாக மகிழ்ச்சி தரும் எதுவும் உண்டோ என்றால் இல்லை என்பது தான் பதில் . ஏனெனில் அதற்கு மாற்று முத்தம் மட்டுமே.    தாயின் பாச முத்தம், காதலன் காதலி அன்பு முத்தம், வெற்றி வீரர்களின் பதக்க முத்தம், தியாகிகளின் மரண முத்தம், வள்ளுவரின் பாலோடு தேன் கலந்த முத்தம், இங்கு எதுவுமே அச்சத்தினால் பயத்தால் கொடுக்கப்பட்ட முத்தம் அல்ல. ஈடில்லா இந்த எழுச்சியால் கொடுக்கப்பட்டதாகும். ஆனால் அப்படிப்பட்ட இனிமையான முத்தமும் பிரம்படியாக மாறுகிறது என்றால் முத்தம் கொடூரமானதா?   தலைப்போ நம் கையை இறுகப்பிடித்து புத்தகத்தின் உள்ளே கூட்டிச் செல்கிறது. பாடல் தலைப்புகளோ, பிரம்படியினால் ஏற்பட்ட தடிப்புகள் மட்டுமின்றி அது மாறாத தழும்பாக நிற்பதை காண முடிகிறது.   “ சிரியாச் சிறுவனின் மரணம் பூமியை முத்தமிட்டவாரு கிடக்கும் நிலை மனதை உலுக்குகிறது. அழுத கண்கள் நீரின்றி வறண்டுவிட்டன! நினைத்துப் பார்த்த நெஞ்சின் ஈரம் உலர்ந்து விட்டது. மனம் படைத்த எந்த மனித மனசாட்சியையும் அசைத்துப் பார்க்கும் வரிகளாக,          “ சிரியாச் சிறுவனே சிரியா குழந்தையே அம்மாவை அணைத்தது போல் “மண்ணில் மரணித்துக் கிடப்பதை படிக்கும் பொழுது பிரம்படியின் வலி தெரிகிறது. நெஞ்சம் பதறுகிறது.

கவிதைகள் எல்லாம் கனத்த இதயத்துட னும் சமூக அக்கறையுடனும் எழுதப் பட்டுள்ளன.  தொடாத தலைப்பில்லை. சொந்த மண், தேசம், சர்வதேசம், உழைப்ப வர்கள், அரசியல்வாதிகள் என்பதோடு மட்டுமின்றி பன்னாட்டு முதலாளிகளின் லாப வேட்கைகளையும் தந்திரங்களை யும் தோல் உரித்து காட்டி இருப்பது கவிஞரின் பரந்துபட்ட சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும். அவைகளில் ஒன்றிரண்டை குறிப்பிடு வது சிறப்புடைத்து. “கீரைப்பாட்டியின் “மனித நேயம், மருத்துவம், ஆனால் பெரிய அங்காடி வருகையால் பாட்டிகளின் வாழ்வு மட்டுமல்ல நம்மிடையே மலர்ந்து வரும் மனிதநேயமும் கருகுவது தெரிகிறது. வாழ்க்கைப் போராட்டத்தில் கல்வி பயில உதவி மிகவும் அவசியமான ஒன்று. ஆனால் அந்த கல்வி கடைச்சரக்காகிப் போனதால் ஏற்படும் விளைவைச் சுட்டிக்காட்டும் பாடல் ஒன்று. “விலை போட்டு வாங்கவா முடியும் கல்வி”  என்றார் பாவேந்தர்.   “ ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் புண்ணியம் கோடி “ என்றார் பாரதி. ஆனால் இன்றைய நிலையோ,   “ எழுத்தறிவை விற்று பண்ணுவோம் கோடி” என்ற நிலை உள்ளது. அந்த நிலையின் கொடூரத்தை சுட்டிக்காட்ட “ ஆயா பசிக்குது” என்று தூக்கத்தில் குழந்தை கூறுவது ஒன்றே போதும்.    நாட்டுக்கு எல்லை வகுத்து ஆண்டது மன்னர் முதல் இன்றைய மக்களாட்சி வரை பெருமை தருவதாகும். நாட்டின் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் “வறுமைக்கு எல்லை வகுத்து கோடு போடும் கொடுமையை என்னவென்று சொல்வது”. கோட்டை வகுத்தவர்கள் ஏழைகள் அல்ல! அவர்கள் சுகவாசிகள். “பாதாம் பருப்புண்டு குளிர்பதன அறையில்

உட்கார்ந்து இருந்தவர்களே”  என்று நடு உச்சியில் நறுக்கென்று கொட்டு வைக்கிறார். உழைக்கும் மக்கள் தங்கள் அடை யாளங்களை இழந்து நடைப் பிணமாய் இருப்பதை, அவர்கள் செய்யும் தொழிலின் பெயரால் அழைத்து சிறுமைப்படுத்தியதைக் கண்டித்து - “நெருஞ்சியிலும் கூட குறிஞ்சி பூக்க வேண்டும்”  என்கிறார். கவிஞரின் உழைப்பாளிகளின் மீது உள்ள பாச உணர்வை வெளிப்படுத்தும் வைர வரிகள்”. இறுதியாக உலகைப் படைத்தது யார் என்றால் கடவுள் என்று கூசாமல் கூறும் மனிதர்களே! மாளிகையை, உலகின் அற்புதங்களை, பூமியின் மேனியில் வியர்வையால் குளிப்பாட்டும் மாயக்காரர் களின் பெயரைக் கூறுவதில் என்ன இழிவு வந்து விடுகிறது! பொங்கி எழும் சினத்துடன் சீறிய கவிஞர்,  “கனலும் கனலாய் கரைந்தலும் கவிதைகள் என்றும் வாழும்” என்று வெடித்துக் கூறுகிறார். இறுதியாகத் துயர நெஞ்சிற்கு ஒத்தடம் கொடுக்கும் வகையில் தாலாட்டு படித்து அனைவரின் துயர மனதை அமைதிப்படுத்தியதற்கு நன்றி! மேலும் உங்களின் பாடல்கள், கவிதைகள்,  குரலற்றவர்களின் குரலாகவும், விழியற்றவர்களின் விழியாகவும், ஏதிலி களுக்கு உதவும் ஆதரவுக்கரமாக விளங்க வேண்டும் என்பதே என் அவா!

நூல்: முத்தத்தின் பிரம்படி (கவிதைகள்) 
ஆசிரியர்: பழனி சோ.முத்துமாணிக்கம்
காலம் வெளியீடு, மதுரை. 
தொடர்புக்கு 94430 78339 
பக்கங்கள் 176, விலை ரூ.200