tamilnadu

img

நகராட்சி அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம்

ஈரோடு, பிப். 9- மாட்டிறைச்சி கடை நடத்த அனுமதி மறுக்கும் புளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைமையில் வியாழ னன்று காத்திருக்கும் போராட்டம் நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்குட்பட்ட வாரச்சந்தையில் மாட்டிறைச்சி கடைகள் கடந்த 50 ஆண்டு காலமாக செயல்பட்டு  வந்தது. இதனை நகராட்சி நிர்வாகம் முன்னறி விப்பின்றி அகற்றியது. இதனை எதிர்த்தும், மீண்டும் அதே இடத்தில் கடை நடத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் அறிவிக்கப் பட்டது. இதனையடுத்து பேச்சுவார்த்தைக்கு அழைத்த நகராட்சி நிர்வாகம் 3 மாதத்திற்குள் கடை  அமைத்து நிரந்தரமாக நடத்த நடவடிக்கை எடுக்கப் படும் என உடன்பாட்டிற்கு வந்தது. ஆனால் அது வரை கடை நடத்த அனுமதிக்கவில்லை. இந்நிலையில் கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி நடை பெற்ற போராட்டத்தையடுத்து மனு கொடுங்கள் தீர்வு காணலாம் என காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர். அதன்படி பாதிக்கப்பட்டவர்கள் மனு  அளித்தனர். இதனைத் தொடர்ந்து நடவடிக்கை இல்லாத நிலையில் மீண்டும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. போராட்டம் நடைபெறுவதாகக் குறிப்பிட்ட நாளுக்கு மறுநாள் வாருங்கள் என நிர்வாகத்தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அவர்கள் கேட்டுக் கொண்டபடி நடவடிக்கை எடுக்கவோ, கடைகள் நடத்தவோ அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் அப்புறப்படுத்தியதைக் கண்டித்தும், மீண்டும் அதே இடத்தில் கடை  நடத்த அனுமதிக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நேரடி இயக்கம் அறிவிக்கப்பட்டது. மாட்டிறைச்சி வெட்டி விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப் பட்டிருந்த நிலையில் நகராட்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.  சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை தலைவர் யு.கே.சிவஞா னம் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது. நகராட்சி அலுவலகத்தில் வெளியே நடைபெற்ற முற்றுகை போராட்டம் உள்ளிருப்பு போராட்டமாக மாறியது. பின்னர் நகராட்சி அலுவலகத்திற்குள் காத்திருக்கும் போராட்டமாக மாறியது. அங்கே மதிய உணவு சாப்பிட்டு போராட்டம் தொடர்ந்த நிலையில், இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடை பெற்றது. ஆனால் உடன்பாடு ஏதும் எட்டப்படாத தால் போராட்டம் தொடர்கிறது. இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.மாரிமுத்து, ஜி.பழனிசாமி, கே.ஆர்.விஜயராகவன், ஆர்.கோமதி, ஏ.எம்.முனுசாமி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் பி.பி.பழனிச்சாமி, மாவட்டச் செயலாளர் எம்.அண்ணாதுரை, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.சண்முகவள்ளி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.லலிதா, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஏ.விஸ்வநாதன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ரஞ்சித்குமார், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் பி.சுப்பிரமணி மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுடன் திரளானோர் கலந்து கொண்டனர். 

ஆணையர் உறுதி போராட்டம் ஒத்தி வைப்பு

இதையடுத்து இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை. மதிய உணவிற்குப் பிறகும் போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில் அடுத்த சுற்று பேச்சுவார்த்தையில், நகராட்சி ஆணையர் அரசுக்கு அறிக்கை அனுப்புவது, தனது அதிகாரத்தை பயன்படுத்தி நிரந்தர ஸ்லாட்டர் ஹவுஸ் கட்ட நகர மன்றத்தில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றுவது என்று உறுதியளிக்கப்பட்டது. இதனடிப்படையில் மாலை 5 மணியளவில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.