tamilnadu

img

காலத்துக்கு ஏற்றதொரு நூலாயுதம் - மயிலை பாலு

சைவ சமயம் ஒரு புதிய பார்வை 
ஆசிரியர்: சிகரம் ச.செந்தில்நாதன்
வெளியீடு: சந்தியா பதிப்பகம், சென்னை - 600 083
தொலைபேசி: 044-24896979, செல்பேசி: 98411 91397
பக்கங்கள்:244, விலை:ரூ.250

முற்போக்காளர்கள் பொதுவாக சமயங்களை, பக்தி இலக்கியங்களை, பக்தி இயக்கங்களை சற்றே விலகியிரும் என்று ஒதுக்கி விடுவது வழக்கம். ஆனால், இளம் வயதிலிருந்தே முற்போக்குச்  சிந்தனைகளைச் சிக்கெனப்  பிடித்து இப்போது 80 வயதை எட்டியபோதும் சமயக் கருத்துக்களை, பக்தி இலக்கியங்களை, பத்தி இயக்கங்களை முற்போக்கு முகாம் எவ்வாறு உள்வாங்கி வெளிப்படுத்த வேண்டும் என்பதற்குப் பாதைப் போட்டுத் தருகிறார். அதுவும் சனாதன சங்கிகள் ஆன்மீகம், ஆகமம்,  பூஜைகள், புனஸ்காரங்கள்,  வேல் யாத்திரை என்று விதவிதமாக மக்களைத் திசைதிருப்பும் நேரத்தில், அவற்றின் பொய்மான் தோற்றங்களை அம்பலப்படுத்த வழக்கறிஞராகி வாதாடுகிறார்..

அரசமைப்புச் சட்டம், மார்க்சியம் ஓர் எளிய  அறிமுகம் என்று எழுதிய அதே பேனாதான்,  ஆலயமும் ஆகமமும், தில்லைக் கோயிலும் தீர்ப்புகளும், முருகன் வணக்கத்தின் மறு பக்கம்,  அருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரை, சைவ வைணவப் போராட்டங்கள் - ஒரு  மறுவாசிப்பு,  பெருந்தெய்வ வழிபாடும் பெண்தெய்வ வழிபாடும், தேவாரம் புதிய  பார்வை,  இலங்கை முருகனும் மலேசிய  முருகனும் என்ற நூல்களையும் எழுதி யிருக்கிறது.  எழுதியவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முன்னத்தி ஏர் சிகரம் செந்தில்நாதன் என்று இந்நேரம் வாசகர்களுக்குப் புரிந்திருக்கும். அந்தப் புரிதலோடு சைவ சமயம் - ஒரு புதிய பார்வை என்ற பொருளில் அவர் எழுதியுள்ள நூலினை ஆய்வு செய்யலாம்.  திருமந்திரம், திருவாசகம்,  பன்னிரு திருமுறை எனத் தொடங்கி சைவசித்தாந்தமும் மார்க்சியமும் என்பது ஈறாக,13 ஆய்வுப் பகுதிகளையும் ‘நிறைவாக’ என்ற தொகுப்பு பகுதியையும் கொண்டு 244 பக்கங் களில் இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. நூலின்  கருப்பொருளை ஒற்றை வரியில் கூறுவ தென்றால் ‘‘ஆரியச்  சைவம் வேறு; தமிழ்ச் சைவம் வேறு’’ என்பதுதான் (பக்கம் 195).  வேதாந்தத்தை அடிப்படையாகக்  கொண்ட  ஆரியச் சைவம் போலல்லாமல் சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழ்ச்  சைவம் ‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்’ என்ற  வாழ்முறையை, வாழ்வியலை முன்னிறுத்து கிறது. இதற்கு நூலாசிரியர் அளிக்கும் முதன்மை ஆதார நூலாக இருப்பது திருமூல ரின் திருமந்திரம். தமிழ் இலக்கியப் பரப்பில் சைவசித்தாந்தம் என்ற சொல்லாட்சி முதன் முதலில் திருமந்திரத்தில்தான் வருகிறது (பாடல் 1421) என்று உறுதியாக நிறுவுகிறார் (பக்கம் 29). எத்தனையோ பாடல்களை அப்படியே மேற்கோளாகக் காட்டியிருக்கும் நூலாசிரியர், பாடல் எண்ணோடு நிறுத்தாமல் பாடலையும் பதிவு செய்திருக்கலாம். அடுத்த பதிப்பில் இது இடம்பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

‘தமிழர்களின் சமயம்’ என்று பொருள் படும் ஆங்கிலக் கட்டுரையில் தமிழ் மக்களின் பூர்வீக சமயம் சைவ சித்தாந்தம் என்பதை டாக்டர் விசுவலிங்கம் உறுதியாகத் தெரிவிப் பது மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது (பக்கம் 212 -213). ஆரிய பிராமணர்கள் தமிழ்  நூல்களை ரகசியமாக வடமொழியில் பெயர்த் தார்கள்.  அதன்பின்னர் வடமொழி நூல்தான் அசல் நூல், தமிழ் நூல் மொழிபெயர்ப்பு நூல்  என்ற தோற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத் தினார்கள் என்ற, பரிதிமாற் கலைஞர் என அறி யப்படும் சூரியநாராயண சாஸ்திரியார் கருத்து மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது.  இதனை ஆசிரியர் கவனமாகப்  பதிவு  செய்துள்ளார். பேராசிரியர் சேஷகிரி சாஸ்தி ரியார், டாக்டர் ஜி.  யு. போப் ஆகியோரின் ஆய்வு ரைகளும் இக்கருத்துக்கு உடன்படுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். சிவஞானபோதத்திற்கு எளிய உரை ஒன்றை எழுதியுள்ள வ.உ.சி. அவர்களும் மூல  நூல் வடமொழியா? தமிழ்மொழியா? என்ற சர்ச்சை இருப்பதை உரைப்பாயிரத்தில் கூறி யிருப்பது நினைக்கத்தக்கது. வேதம் என்றாலே வடவரின் நான்கு வேதங்கள் என்று பொருள் கொள்வது அறியாமை.

அந்த அறியாமையை மேலும் அதிகரிப்ப தற்கு தினமணியில் பணியாற்றிய கே.சி. லட்சுமிநாராயணன் என்பார் “வேதங்களை ஏற்றுப் போற்றும் தமிழ் இலக்கியங்கள்” என்ற ஒரு நூலை எழுதியிருக்கிறார். கவனம் பெறாத நூல்தானே என்று விட்டு விடாமல் ப.இராமநாதப்பிள்ளை அவர்கள் எழுதிய திருமந்திரத்திற்கான உரையோடு ஒப்பிட்டுத் ‘தமிழ்வேதம்’ என்பதன் தனித் தன்மையை ‘சிகரம்’ நிறுவுகிறார் (பக்கம்  206-218).  திருஞானசம்பந்தரின் தேவாரத்தைத்  ‘‘தமிழ்வேதம் பாடினார்’’ என சேக்கிழார் கூறு வதையும் நூலாசிரியர் எடுத்துரைக்கிறார் (பக்கம் 204). சைவசமயம் சார்ந்த ஆய்வின் ஊடாக சமூகம் சார்ந்த கருத்துக்களைப் பதிவிடவும் அவர் தவறவில்லை. ‘‘எதிர்காலக் குழந்தை உறையும் இடம் கருப்பை. இதை எண்ணிப் பார்க்காமல் ‘தீட்டு’  என்று இழிவாகப் பேசுபவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? இப்படிச் சொல்பவர்கள் அறிவற்றவர்கள்’’.

இது இருபத்தோராம் நூற்றாண்டின் குரல்  அல்ல. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய திருமூலரின் குரல் (பக்கம்-36). திருக்களிற்றுப் படியார் என்பது சைவ சித்தாந்த நூல் வரிசையில் இரண்டாவதாகும். இதனை இயற்றிய திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் ஆடு மேய்க்கும் குலத்தவர் என்பதால் யாரும் ஏற்கவில்லை. இதனால் சிதம்பரம் நடராஜர் கோயில் நுழைவாயிலில் வைத்துவிட்டு வந்துவிட்டார்.   அங்கிருந்த கல் யானைகள் உயிர்த்தெழுந்து அதனை நட ராஜர் சிலையின் காலடியில் வைத்தனவாம். அதனால்தான் இது திருக்களிற்றுப்படியார் ஆனதாம் (பக்கம் 91-92). சிவஞானபோதம் சைவசித்தாந்தத்தில் மிகவும் முக்கியமானது. இதனை இயற்றி யவர் சத்தியஞான தரிசினிகள். இந்த வட மொழி பெயரைத்தான் 13ஆம் நூற்றாண்டி லேயே மெய்கண்டார் என தமிழாக்கம் செய்துகொண்டிருக்கிறார் (பக்கம் 95). விவேகானந்தர் -  மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை இடையேயான உரையாட லின் போது முன்னவரிடம் பின்னவர்,  “நான்  இந்து அல்ல; திராவிடன்” என்று கூறியிருக்கிறார் (பக்கம் 235). இப்படியாகத் தமது ஆய்வுக்கிடையே முற்போக்குத் தமிழ் மரபை வித்துக்களாய் ஆசிரியர் விதைத்திருக்கிறார். ஆய்வு என்பது இன்னொரு ஆய்வுக்குத் தூண்டுதலாகவும் வழிகாட்டியாகவும் விளங்க வேண்டும். அந்த வேலையையும் தெளிவாக ஆசிரியர் செய்திருக்கிறார். 

தமிழ்நாட்டில் பாசுபதம், மாவிரதம், கபாலிகம், வைரவம்  ஆகிய பிரிவுகள் இருந்துள் ளன. இவற்றுக்கும் சைவ சித்தாந்தத்திற்கும் உள்ள தொடர்புகள் அல்லது உறவுகள் எத்தகையவை என்பதற்குப் போதிய தரவுகள் இல்லை;  இவைபற்றி பக்தி இயக்கத்தின் அணுகுமுறை என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை (பக்கம் 137). சிறுதொண்டர் வீட்டில் பிள்ளைக்கறி கேட்கும் சிவன் வைரவர் தோற்றத்தில்தான் வருகிறார். எனவே, சைவ சித்தாந்தம் இப்பிரிவை நட்புடன் பார்க்கிறது என்று கொள்வதில் தவறில்லை. ஆனால் ஏன் நட்புடன் பார்க்கிறது என்ற கேள்விக்கு சரியான  பதில் இல்லை (பக்கம் 138). பல்லவ மன்னன் மகேந்திரன் ‘‘மத்த விலாசப் பிரஹசனம்’’  நாடகத்தை சமண சமயத்தில் இருந்தபோது எழுதினானா?  சைவத்திற்கு வந்தபின் எழுதினானா? என்பது  இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது (பக்கம் 143).

வலங்கை - இடங்கைப் போராட்டத்தை சாதிப் போராட்டமாகப் பார்க்க முடியாது. அந்நாளின் வர்க்கப் போராட்டமாகவே மதிப்பிடலாம் என்று கூறுகிறார் நூலாசிரியர்.  இந்தப் போராட்டம் பற்றிய தகவல்களின் போதாமையைக்  குறிப்பிட்டு மேலாய்வைக் கோருகிறார் (பக்கம் 183). இவையெல்லாம் இளம் ஆய்வாளர் களுக்கு மூத்த ஆய்வாளரின் முன்மொழி வுகள். இவற்றை ஆய்வுக்கு உட்படுத்தும் போது சமய ஆய்வுக்கும் தமிழ் உலகிற்கும் புதிய வெளிச்சம் கிடைக்கும்.  அதேபோல் நாயன்மார் காலத்தில் சைவர் களிடையே சாதி வேறுபாடுகள்  இல்லை என்பதும் சாதியைவிட சமய வளர்ச்சியே  பெரிதாகக் கருதப்பட்டு வந்தது என்பதும்  நன்கு புலனாகும் (பக்கம் 178) என்ற நூலா சிரியரின் கருத்தும் ஆய்வுக்குரியதாகும். எழுபதுக்கும் அதிகமான நூல்களைப் பயின்று ஆய்வு செய்து சைவ சமயத்திற்கு ஒரு புதிய பார்வையை சிகரம் செந்தில்நாதன் தந்திருக்கிறார்.

இப்படி சைவ சமயத்தையும் சிவன் என்ற கடவுளையும் பக்தி இலக்கியங்களையும் ஆய்வு செய்திருப்பதன் நோக்கம் மக்களை பக்தர்களாக மாற்றுவது அல்ல; பக்தர்களை வெறியர்களாக மாற்றி இந்துத்துவ போதை  ஏற்றி சூலாயுதம் கொடுக்கும் சங்கிகளை எதிர்கொள்ள நூலாயுதம் வழங்குவதுதான் என்பது ஒவ்வொரு பக்கத்திலும் தெளிவாக்கப் பட்டுள்ளது. இதற்கு ஆதரவாகக் காவி உடைதரித்த போதும் மார்க்சிய கருத்துக்களை எடுத்து ரைத்து தமிழ்நாட்டில் தடம்பதித்த குன்றக்குடி அடிகளாரின் ‘‘சைவசித்தாந்தமும் மார்க்சியமும்’’  என்ற கட்டுரையை ஆசிரியர்  மேற்கோளாக்குகிறார். ‘‘சைவசித்தாந்தமும் மார்க்சியமும் முரண்பட்டவை அல்ல; உடன்பட்டவையும் அல்ல. சில மாறுபாடுகள் உள்ளன என்பது உண்மை. இந்த மாறுபாடுகள் தத்துவங்கள் தோன்றிய காலம் காரணமாகவும் அமைந்திருக் கலாம் அல்லது உண்மையான மாறுபாடு களாகவும் இருக்கலாம். சைவசித்தாந்தம் கட வுளை நம்புகிறது; மார்க்சியம் கடவுளை நம்ப வில்லை. இது ஒரு முக்கியமான வேறுபாடு.

மற்றபடி உலகத்தின் தோற்றம், உயிர்களின் நிலை, இந்த உலக வாழ்க்கை, உழைப்பின் சிறப்பு, உழைப்பாளர் தகுதி  ஆகியவற்றில் சைவசித்தாந்தமும் மார்க்சியமும் ஒன்றுபடுகின்றன’’ என்ற கருத்தை நூலாசிரியர் எடுத்துரைக்கிறார். அதோடு மட்டுமின்றி, ‘‘பாட்டாளிவர்க்க கலாச்சாரம் மாயமாய் வெற்று வெளியினின்று தயாரிக்கப்படக் கூடியதல்ல.  கம்யூனிசக் கலாச்சார நிபுணர்கள் எனத் தம்மை அழைத்துக் கொள்வோர் கண்டுபிடித்துக் கொடுத்துவிடக்  கூடியதுமல்ல. அவ்வாறு பெறலாம் என்பது  அபத்தப் பேச்சு.  முதலாளித்துவ சமுதாயம்,  நிலப்பிரபுக்களின் சமுதாயம்,  அதிகார வர்க்க சமுதாயம் ஆகியவற்றின் ஆதிக்கத் தில் மனிதகுலம் சேமித்து வந்திருக்கும் அறிவுக்  கருவூலத்தின் தர்க்க ரீதியான வளர்ச்சி யாகவே பாட்டாளி வர்க்கக் கலாச்சாரம் இருக்க முடியும்’’ என்று லெனின் கூறியதை குன்ற க்குடி அடிகளார்  மேற்கோளாக்கியிருக்கிறார். அதனை நூலாசிரியர் அப்படியே எடுத்தாண்டு தமது வாதத்திற்கு வலுசேர்த்திருக்கிறார். இத்தகைய செறிவான நூலினைப்  படித்துப் பயன்பெறுவதும்,  விவாதிப்பதும், சைவசித்தாந்தம் வேறு; ஆரிய சித்தாந்தம் வேறு;  தமிழ்மரபு திருஞானசம்பந்தர் என்ற  அந்தணர் வேறு; ஆரிய பிராமணர் ஆதிசங்கரர் வேறு;  ரிக், யஜூர், சாம, அதர்வண வேதம் வேறு;  அறம், பொருள், இன்பம், (வீடு) பேசும் சைவ  சித்தாந்தம் வேறு என்ற  நுட்பமான வேறுபாடு களை மக்களிடையே உரக்கப் பேசுவதும் சனா தன அபாயத்தைத் தடுத்து நிறுத்த உதவும்.  ‘‘கலாச்சார முதுகெலும்பு உடைக்கப்பட்ட தேசம் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பதை நிறுத்திவிடும்’’. -லெனின்