கரூர், அக்.23 - கரூர் மாவட்டம், தளவாபாளைத்தில் உள்ள எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் கடந்த ஞாயிறன்று சிலம்பத்தில் உலக சாதனை நிகழ்த்தும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பாரதம் சிலம்பம் அகாடமி நிறுவனர் ஆசான்.கிருஷ்ணராஜ், கரூர் அமெச்சூர் சிலம்பம் சங்கம் ஆசான் செளந்தரராஜன் ஆகியோர் இணைந்து நடத்தினர். இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் 450-க்கும் மேற்பட்ட மாணவர்கள் குழுவாகவும், 32 மாணவர்கள் தனிநபர் போட்டியிலும் பங்கேற்றனர். 195 நாடுகள் - தேசியக் கொடி பெயர் கூறல் இந்நிகழ்ச்சியில் கரூர் காகிதபுரத்தில் வசித்து வருபவர்கள் ஆனந்த ஐயப்பன்-பரணி தம்பதி. இவர்களது மகன் ஆ.குகன் கார்த்திக்கேஸ்வரன் (10) கரூர் பரணி வித்யாலயா பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் சிலம்பத்தில் உள்ள அனைத்து ஆயுதங்களையும் சுழற்றி கொண்டே 195 நாடுகளின் தேசிய கொடியை பார்த்து நாடுகளின் பெயரை கண்ட றிந்தும், 195 நாடுகளின் வரை படத்தை பார்த்து அந்த நாடுகளின் பெயரை கண்டறிந்து கூறியும் புதிய உலக சாதனை படைத்தார். இந்த சாதனையை திருச்சியைச் சேர்ந்த ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து பாராட்டி சான்றிதழ் வழங்கியது. உலக சாதனை புரிந்த மாணவருக்கு சான்றிதழுடன் பதக்கம் மற்றும் நினைவு கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. திரைப்பட சண்டை பயிற்சி இயக்குநர் ஆசான் பவர் பாண்டியன் மாணவரை பாராட்டினார். குமாரசாமி பொறியியல் கல்லூரி தலைவர் டாக்டர் ராமகிருஷ்ணன், மோனிகா கார்த்தி, புலியூர் வீர திருப்பதி மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சிலம்ப பயிற்சியாளர்களும் மாணவர் குகனைப் பாராட்டினர்.