tamilnadu

img

மனைவியின் திருமண சீர்வரிசை தொடர்பான வழக்கு பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் ஏ.பி. முருகானந்தத்திற்கு பிடிவாரண்ட்

கோயம்புத்தூர், நவ. 11 - திருமண சீர்வரிசை தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தத்திற்கு கோவை மகளிர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் மதுக்கரை அடுத்த சாவடிபுதூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் சாமி. இவரது மகள் ஞான சௌந்தரிக்கும், பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் ஏ.பி. முருகானந்தத்திற்கும் கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு சுந்தர் சாமி ஒன்றரை ஏக்கர் நிலம், 60 சவரன் தங்க நகைகள், 10 லட்சம் வீட்டு உபயோக பொருட்களை சீதனமாக கொடுத்திருந்த நிலையில், திருமணம் முடிந்த சில மாதங்களில் ஞான சௌந்தரி கருத்து வேறுபாடு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் திருமணத்திற்காக கொடுத்த சீர்வரிசை சீதனப் பொருட்களை, தங்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என சுந்தர்சாமி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், பல வாய்தாக்களில் ஏ.பி. முருகானந்தம் மற்றும் அவரது தந்தை பழனிச்சாமி ஆகியோர் ஆஜராகவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு திங்களன்று கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆனால், இன்றைய விசாரணையிலும் பாஜக பொதுச்செயலாளர் ஏ.பி. முருகானந்தம் மற்றும் அவரது தந்தை ஆஜராகவில்லை.  இதைதொடர்ந்து இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி ரகுமான், நவம்பர் 27-ஆம் தேதி நடைபெறும் வழக்கு விசாரணைக்குள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.