புதுதில்லி, பிப்.11- இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 2 டோஸ் தடுப்பூசிபோட்ட சர்வதேச பயணிகளுக்கு இனி 7 நாள் தனிமைப் படுத்துதல் இல்லை எனவும் கூறியுள்ளது. சர்வ தேச விமான பயணிகளுக்கான தளர்வு பிப்ரவரி 14 முதல் அமலுக்கு வருகிறது. கொரோனா தொற்று அதிகம் இருந்ததால் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் கட்டாயம் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யவும், 7 நாள் தனிமைப்படுத்தி கொள்ளவும் ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. ஒமைக்ரான் அதிகம் பரவக்கூடிய அபாயம் உள்ள நாடுகள் என பட்டியலிடப்பட்ட நாடுகள் குறித்த பட்டியலை சுகாதாரத்துறை நீக்கம் செய்துள்ளது. வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் 14 நாட்கள் சுயமாக தங்கள் உடல் நிலையை கவனித்துக் கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவல் மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்டுள்ள ஒமைக்ரான் பரவல்காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு வரும் பயணிகள் அனைவரும் தங்களது அனைத்து விபரங்களையும், கடந்த 14 நாட்களில் சென்று வந்த நாடுகளின் விபரங்களையும், சுவிதா இணையதளத்தில் பதிவிட வேண்டும் என்றும் கூறியிருந்தது. பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில், போத்ஸ்வானா, சீனா, மொரீஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல், தான்சானியா, கானா, காங்கோ, எத்தியோப்பியா, கஜகஸ்தான், கென்யா, நைஜீரியா, துனிசியா, ஜாம்பியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள், இந்தியா வந்ததும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றுகளை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதில் நெகட்டிவாக வந்தால் அவர்கள், தங்களை 7 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவித்திருந்தது. தற்போது இந்தியா‘வரும் சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப் பாடுகளை ஒன்றியஅரசு தளர்த்தியுள்ளது.