சிதம்பரம்,பிப்.28- தஞ்சாவூரை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் தெய்வத் தமிழ் பேரவை சார்பில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிற்றம்பல மேடையில் ஆறு நாள் தொடர்ந்து தேவாரம் திருவாசகம் ஓதுதல் நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, திங்களன்று (பிப்.28) குச்சனூர் வடகுரு மடாதிபதி, ராஜயோக சித்தர்பீடம் குச்சனூர் கீழார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் கீழவீதி தேரடியில் இருந்து ஊர்வலமாக தேவாரம் திருவாசகம் பாடிக் கொண்டு சிவ வாத்தியங்கள் முழங்கியபடி கீழ சன்னதி வழியாக கோவில் சிற்றம்பல மேடைக்கு செல்ல முயன்றனர். அப்போது, காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.