tamilnadu

img

இந்திய மாணவர் சங்கத்தின் 27ஆவது மாநில மாநாடு திருப்பூரில் 200 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைப்பு

இந்திய மாணவர் சங்கத்தின் 27ஆவது மாநில மாநாடு திருப்பூரில் 200 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைப்பு

திருப்பூர், மே 18 – இந்திய மாணவர் சங்கத்தின் 27 ஆவது மாநில மாநாடு திருப்பூரில் வரும் ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக 200 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் வெள்ளியன்று இந்திய மாணவர் சங்கத்தின் மாநில மாநாட்டு வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எஸ்.பிரவீன் குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்டத் தலைவர் க.சு.கல்கிராஜ் வரவேற்றார். மாநாட்டின் நோக்கம் குறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் சம்சீர் அகமது மற்றும் மாநிலச் செயலாளர் அரவிந்தசாமி ஆகியோர் உரையாற்றினர். இதில், இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன், முன்னாள் மாநில துணைத்தலைவர் செ.முத்துக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று இந்திய மாணவர் சங்கத்தின் அர்ப்பணிப்பு மிக்க பணிகள் குறித்து நினைவு கூர்ந்தனர்.  

வரவேற்புக்குழு அமைப்பு

முன்னதாக, மாநாட்டு வரவேற்புக்குழுவின் தலைவராக ஆர்.ஈஸ்வரன், செயலாளராக சம்சீர் அகமது, பொருளாளராக டி.ஜெயபால் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், கே.காமராஜ், செ.முத்துக்கண்ணன் உள்ளிட்ட 15 பேர் புரவலர்களாகவும், சா.பிரவீன் குமார், க.சு.கல்கிராஜ் ஆகியோர் இணைச் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் 62 துணை நிர்வாகிகள் உட்பட மொத்தம் 200 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. மாநில மாநாட்டு வரவேற்புக்குழுவை அறிமுகம் செய்து எஸ்.கண்ணன் பேசுகையில், “தற்போதுள்ள நாடாளுமன்றம் பெரும் கோடீஸ்வரர்களால் நிறைந்துள்ளது. கல்வி தற்போது கார்ப்பரேட்மயமாக்கப்பட்டு, காவிமயமாக்கப்பட்டு வருகிறது. கல்வி நிறுவனங்களை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கையகப்படுத்தி வருகின்றனர். கல்வி வணிகமயமாக மாறியுள்ளது. இதிலிருந்து கல்வியை விடுவிக்க வேண்டிய பொறுப்பு அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் உள்ளது. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டபோது தில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அப்போது சீக்கிய மாணவர்களைப் பாதுகாத்தது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இருந்த மாணவர் சங்கம் தான். அந்த மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்தவர் எல்லோராலும் மதிக்கக்கூடியவராக வாழ்ந்து மறைந்த தோழர் சீத்தாராம் யெச்சூரி. ‘படிப்போம் போராடுவோம், படிப்பிற்காக போராடுவோம்’ என்ற அதே லட்சியத்துடன் மாணவர் சங்கம் இன்றும் முன்னேறிச் செல்கிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் முதல் முறையாக மாணவர் சங்கத்தின் மாநில மாநாடு திருப்பூரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றி பெறச் செய்வோம்” என்றார். தொடர்ந்து செ.முத்துக்கண்ணன் பேசுகையில் “இந்திய அரசியல் அமைப்பு குடிமக்களுக்கு வழங்கியுள்ள பேச்சு சுதந்திரம் தற்போது ஆளும் பாஜக அரசால் பறிக்கப்படுகிறது. படிக்கும் மாணவர்கள் உபா போன்ற கொடும் சட்டங்களால் கைது செய்யப்படுகின்றனர். குரலற்றவர்களின் குரலாகச் செயல்பட வேண்டிய ஊடகங்கள் அரசின் ஊதுகுழலாக மாறிவிட்டன. முழுமையான சுதந்திரத்தையும், சுரண்டலற்ற நாட்டையும் உருவாக்க சோசலிசமே ஒரே வழி. எனவே, இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் மாணவர்களை அணிதிரட்ட இந்த மாநில மாநாடு வழிவகுக்கும். மாநாடு நடைபெற உள்ள செய்தியை அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்” என்றார்.