tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

கொலைக் குற்றவாளிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நாகர்கோவில். ஏப். 5- குமரி மாவட்டத்தில் கொலை வழக்கு குற்றவாளிகள் இருவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.      கடந்த மார்ச் மாதம்  கோட்டார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்தவரை  தீ வைத்து எரித்து கொலை செய்த வழக்கில் கீழராமன்புதூர், தட்டான் விளை பகுதியை சேர்ந்த தங்கராஜா என்பவரது மகன் சுதன் (26), மற்றும் தோவாளை திருமலைபுரம் பகுதியைச் சேர்ந்த ரவிராஜ் என்பவரது மகன் சுகுணேஷ் (26) ஆகிய இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டனர். இவ்விரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சி யர். அழகுமீனா மேற்படி கொலை குற்றவாளிகள் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ்சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவின்படி கொலை குற்றவாளிகள் சுதன் மற்றும் சுகுணேஷ் இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மாவட்டத்தின் சட்டம்ஒழுங்கினை பாதுகாக்க இந்த நடவடிக்கையானது மேலும் தீவிரப்படுத்தப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர் மழையால் சேர்வலாறு அணை  நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்தது

திருநெல்வேலி ,ஏப். 5- நெல்லை, தென்காசி  மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையிலும், பிற்பகலில் பரவலாக மழை பெய்து வருகிறது.  மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் இடி-மின்னலுடன் பெய்து வரும் மழையினால் ஆங்காங்கே மின்கம்பங்கள், மரக்கிளைகள் முறிந்தன.மாவட்டத்தின் சில இடங்களில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகின.  இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்துவரும் கனமழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.  பிரதான அணையான 143 அடிகொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 1/2 அடி உயர்ந்து 88.10 அடியாக உள்ளது.அந்த அணை பகுதியில் 49 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சேர்வலாறு அணை பகுதியில் 47 மில்லிமீட்டர் மழை பெய்துள்ள நிலையில், அணை நீர்மட்டம் வெள்ளியன்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 104 அடியை எட்டியுள்ளது. இந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு 1016 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.  அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 300 கனஅடி நீர் வெளியேற்றப் படுகிறது. நம்பியாறில் 24 மி ல் லி மீட்டரும், கொடுமுடியாறில் 27 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.  118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையில் 32 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 70 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த அணை நீர்மட்டம் 84.45 அடியாக உள்ளது.   நெல்லை மாவட்டத்தை பொறுத்த வரை மூலைக்கரைப்பட்டி களக்காடு, நாங்குநேரி பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. சேரன்மகாதேவி, ராதாபுரத்தில் வறண்ட வானிலை காணப்பட்டது. மாநகரில் நெல்லையில் 2.40 மில்லிமீட்டர் பெய்துள்ளது.

வேம்பு பூச்சிக்கொல்லி குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

பூதபாண்டி, தோவாளை வட்டாரத்தில் அவ்வையார் அம்மன் கோவில் பகுதியில்,வேம்பு பூச்சிகொல்லி குறித்து விவசாயிகளுக்கு வேளாண் மாணவர்கள் செயல்விளக்கம் அளித்தனர். தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனார் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் இளங்கலை இறுதி ஆண்டு மாணவிகளாகிய அபிதா, இஷா, கலைச்செல்வி, கல்பனா, கார்த்திகா, ஷீரின் பார்ஹான்னா சுபாலக்ஷ்மி, சூரியபிரபா ஆகியோர் அவ்வையார் அம்மன் கோவில் சுற்று வட்டார பகுதியில் கிராமப்புற வேளாண் களப்பயிற்சி அனுபவம் பெற்று வருகின்றனர். வேம்பு பூச்சிகொல்லி பயிர்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் பூச்சிகளை குறைக்கும் மற்றும் பயிர்களை பாதுகாக்கும்.இதன் செயல்முறை மாட்டு சானம், கோமியம், வேம்பு(அரைத்து)இதனை தண்ணீரில் கரைத்து செடிகள் மீது தெளித்து வர பூச்சிகள் குறையும் என இது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர். கல்லூரி முதல்வர் தேரடிமணி தலைமையில் பேராசிரியர்கள் காளிராஜன், பாஸ்கர்,மீனாட்சி ஆகியோர் மாணவர் களை ஒருங்கிணைத்து வழிநடத்தினர்.

உதவி காவல் ஆய்வாளர் வீட்டில்   திருட்டு

நாகர்கோவில். ஏப். 5- கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர் வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் விலை உயர்ந்த கை கடிகாரங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளமடம் பகுதியில் உள்ள உதவி காவல் ஆய்வாளர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.35 ஆயிரம் ரொக்கம், விலை உயர்ந்த 4 கை கடிகாரங்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.