மதுரை, ஏப்.6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் மதுரை மக்களவை உறுப்பினருமான சு.வெங்கடேசன் முயற்சியால் 100 நாள் வேலைத்திட்டத்தில் தமிழகத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய கூலி பாக்கி 1,995 கோடியே 77 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை மத்திய கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஞாயிறன்று விடுவித்து உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் பணியாற்றியவர்களுக்கு கூலித்தொகை இரண்டரை மாதங்களாக வழங்கவில்லை.
ஜனவரி 13- ஆம் தேதியிலிருந்து வழங்க வேண்டிய கூலி பாக்கி ரூ 671 கோடி; பொருளாகத் தர வேண்டிய பாக்கி ரூ 300 கோடி. மொத்தம் சுமார் 1000 கோடி. இந்தத் தொகையை தாமதமின்றி உடனே வழங்க வேண்டுமென மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடந்த வாரம் மத்திய கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், நெருக்கடி மிக்க இந்தக் காலத்தில் உடனடியாகச் செயல்பட்டு கிராமப்புற மக்களுக்கான நியாயத்தை வழங்குங்கள் என்று வலியுறுத்தியிருந்தார். இதையடுத்து ஞாயிறன்று மத்திய அமைச்சர் தோமர் உத்தரவின் பேரில் 1,995 கோடியே 77 லட்சத்து தொண்ணூராயிரம் ரூபாயை மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் இயக்குநர் விடுவித்துள்ளார்.
ஜூலை மாதம் வரையிலான கூலித்தொகையை கணக்கிட்டு தமிழகத்துக்கு 1995 கோடியே 77 லட்சத்து தொண்ணூராயிரம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் உழைப்பாளி மக்களுக்காக தொடர்ந்து போராடும். அதில் வெற்றி பெறுமென்பதற்கு இது ஒரு உதாரணம். அதே நேரத்தில் ஜனவரியிலிருந்து தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய பொருட்களையும் தாமதமின்றி வழங்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தியுள்ள சு.வெங்கடேசன், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றியவர்களுக்கு கூலியை எவ்வித தாமதமுமின்றி உடனடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.