tamilnadu

img

விபத்தில் இறந்தவரின் உடல் உறுப்புகள் 10 பேருக்கு தானம்.... சேலம் சிபிஎம் கோவிட் உதவி மையத்தின் முயற்சி வெற்றி...

சேலம்:
சேலத்தில் விபத்தில் இறந்தவரின் உடல் உறுப்புகள் 10 பேருக்கு தானம் வழங்க மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் கொரோனா உதவி மையம் சார்பில் உறவினர்களிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தை முயற்சி வெற்றி பெற்றது.

 நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்தவர் மாதேஷ் (27). இருவருக்கு தீபா என்பவருடன் திருமணமாகி,  ஐந்து மாதமே ஆகிறது. இந்நிலையில், ஆண்டலூர் கேட் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதில் மாதேஷ்க்கு தலையில்பலத்த அடிபட்ட நிலையில் சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடுமையான முயற்சிகள் செய்தும், மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.  இந்த சூழ்நிலையில் மாதேஷ் குடும்பத்தினர் சிபிஎம் உதவிமையத்தை சேர்ந்த   மேவை.சண்முகராஜாவை தொடர்பு கொண்டனர். இதையடுத்து உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந்த மேவை.சண்முகராஜா, இரு தரப்பு குடும்ப நபர்களிடம் உடல் உறுப்பு தானம் செய்வதன் மேன்மையை மருத்துவ மனிதநேய தேவையை எடுத்துக் கூறினார்.

 மாதேஷின் சகோதரர் மகுடீஸ்வரன் மருத்துவத்துறையில் இருந்ததால் உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து பெரும்விழிப்புணர்வுடன் இருந்தார். இதைத்தொடர்ந்து, சிபிஎம் உதவி மையம் மூலமாகசேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை முதல்வர் மற்றும் உடல் உறுப்புகள் தானம் பெறும் மையத்தை தொடர்பு கொண்டுபேசிய போது சென்னை, சேலத்தில் உடல் உறுப்பு அறுவை சிகிச்சை வார்டுகள் கோவிட் மையமாக மாற்றப்பட்டதால், அங்குஉடல் உறுப்பு அறுவை செய்ய இயலாது என்றனர். அதன் பின் அரசு வழிகாட்டல்படி, தற்போது உள்ள தனியார் மருத்துவ மனையில் இருந்து, சேலம் காவேரி மருத்துவமனைக்கு  மாதேஷ் மாற்றப்பட்டார். சென்னையில் இருந்து வந்த, காவேரி மருத்துவ மனை உயர் மருத்துவர் அதிகாரிகளுடன், மாதேஷின் மனைவி தீபா, மாதேஷ் சகோதரர் மகுடீஷ்வரன், இரு தரப்பு பெற்றோர்கள், சிபிஎம் உதவி மையம் சார்பாக மேவை.சண்முக ராஜா, ஆகியோர் நேரில்கலந்துபேசி, அதன் வழிமுறைகள், மற்றும் உடல்உறுப்பு தானம் செய்திட முழு சம்மதமும் உறுதிப்படுத்தப்பட்டது.

மருத்துவத்துறை விதிகளின்படி பல்வேறு  பரிசோதனைகள் செய்யப்பட்டு மூளைச்சாவு என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதையடுத்து, அரசு மட்டத்தில் முறையாக உடல் உறுப்பு கேட்டு பதிவு செய்து,சிகிச்சையில் இருந்து வரும் மருத்துவமனை யிடம் அரசு பேசி உறுதி செய்தது. அதன் பின், அரசு தலைமை அறுவை சிகிச்சை மருத்துவர் தலைமையில் காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் உடல் உறுப்புகளை தனித்தனியாக அறுவை சிகிச்சை செய்து எடுத்தனர். ஏற்கனவே திட்டமிட்டபடி, இதயம்ஹெலிகாப்டர் மூலமாக சென்னைக்கும், நுரையீரல், கணையம், சிறுநீரகம் (2), கருவிழிபடலம் (2), தோல், எலும்பு, உள்ளிட்ட சில முக்கிய உறுப்புகள் சென்னை, கோவையில் உள்ள சில முக்கிய மருத்துவமனை களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதிக்கப்பட்ட பல நபர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து, புது வாழ்வு கிடைத்திட உதவியாக அமைந்தது. அதன் பின் இரவு 9 மணிக்கு மேல் ராசிபுரம் அருகே மின் மயானத்தில் மாதேஷ் உடல் எரியூட்டப்பட்டது. 

கருணை அடிப்படையில் வேலை வழங்க எதிர்பார்ப்பு
மனிதநேயத்தின் மணிமகுடமான உடல் உறுப்பு தானத்தை அந்த சோகமான சூழ்நிலையிலும், பக்குவமாய் ஏற்றுக் கொண்ட மாதேஷ்மனைவி தீபா, மாதேஷ் சகோதரர் மகுடீஷ்வரன்  மற்றும் பெற்றோர்களை மருத்துவத்துறை அதிகாரிகள் மனதாரப் பாராட்டினர்.  மாதேஷின் மனைவி 2 முதுகலை பட்டம்பெற்றவர். எனவே, அவருக்கு தமிழக அரசுகருணை அடிப்படையில் வேலைவாய்ப்பும், நிவாரணமும் வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். சிபிஎம் உதவி மையம் உதவி செய்வதாகவும், அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என உறவினர்களிடம் தெரிவித்தனர். சிபிஎம் உதவி மையத்தின் சார்பில் எடுக்கப்பட்ட இந்த முயற்றி அனைத்து தரப்பிலும் பாராட்டைப் பெற்றுள்ளது.