மும்பை:
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில், போபால் மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குர் உள்ளிட்ட 7 பேரும், வாரம் ஒருமுறை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணைக்கு முறையாக ஆஜராகத் தவறியதால், மும்பை தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்ற நீதிபதி வினோத் பதல்கர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.மகாராஷ்டிர மாநிலம், மாலேகான் நகரில் கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி ஒரு மசூதி அருகே இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 6 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்புச் சம்பத்தில் இந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக, அப்போதைய மும்பை பயங்கரவாதத் தடுப்பு பிரிவின் தலைவர் ஹேமந்த் கார்கரே கண்டுபிடித்தார். மேலும், புரோகித், பிரக்யா சிங் தாக்குர், ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாயா, அஜய் ரஹிர்கார், சுதாகர் திவேதி, சுதாகர் சதுர்வேதி, சமீர் குல்கர்னி உள்ளிட்டோரை கைது செய்தார். இவர்கள் மீது ஐபிசி 120(பி), 302, 207, 324, 153(ஏ) ஆகிய பிரிவுகளிலும், சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தற்போது, இந்த வழக்கு மும்பை தீவிரவாதத் தடுப்புப் பிரிவிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.,) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கீழ் நீதிமன்றங்களில் பிரக்யா சிங், புரோகித் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மும்பை உயர் நீதிமன்றம் 9 ஆண்டுகளுக்குப்பின் ஜாமீன் வழங்கியது.
ஜாமீன் கிடைத்தபின் அண்மையில் பாஜக-வில் இணைந்த பிரக்யா சிங் தாக்குர், தற்போது அக்கட்சியின் சார்பில் போபால் மக்களவைத் தொகுதியிலும் வேட்பாளர் ஆகியிருக்கிறார்.இதனிடையே, ஜாமீனில் வந்தபின், பிரக்யா சிங் உள்ளிட்டவர்கள், நீதிமன்ற விசாரணைக்கு முறையாக ஆஜராகவில்லை. இதனால், சிறப்பு நீதிமன்ற நீதிபதி வினோத் பதல்கர், பிரக்யா சிங் உள்ளிட்ட 7 பேரும் வாரம் ஒருமுறை நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
தற்போது இவ்வழக்கில் சாட்சிகளின் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன.