மேலவளவு கொலை வழக்கு
மதுரை,நவ.27- மதுரை மேலவலவு பஞ்சாயத்து தலைவராக இருந்த ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த முருகேசன் உள்பட 7 பேர் 1996 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அதனை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 13 பேர் எம்ஜிஆர் நூற்றாண்டையொட்டி முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் 13 பேரும் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்தும் விடுதலை செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணை நகலை வழங்கக் கோரியும் வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த்வெங்கடேஷ் அமர்வு முன்பு புதனன்று நடைபெற்றது. இதில், மேலவளவு கொலை வழக்கில் முன்விடுதலை செய்யப்பட்ட 13 பேரும் , எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு முடியும்வரை மேலவளவிற்குள் நுழையக்கூடாது என்று உத்தரவிட்டனர். அவர்களது முகவரி மற்றும் செல்போன் எண்களை காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அதனை மதுரை, வேலூர் எஸ்.பி.க்கள் உறுதிப்படுத்த வேண்டும். 2 மற்றும் நான்காம் வார ஞாயிற்றுக்கிழமைகளில் நன்னடத்தை அலுவலர் முன்பாக ஆஜராக வேண்டும். வேலூர் எஸ்.பி. முன்பாக முதலாவது மற்றும் மூன்றாவது ஞாயிறன்று ஆஜராக வேண்டும். முன்விடுதலை ஆனவர்கள் பாஸ்போர்ட்டை மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இது தொடர்பாக எவ்வித கூட்டம் நடைபெறவும் அனுமதிக்கக்கூடாது. அதனை மதுரை எஸ்.பி. உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக முன்விடுதலை செய்யப்பட்டவர்கள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கை ஜனவரி 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.