tamilnadu

img

வழி நெடுகிலும் உடைந்த பாட்டில்கள், கழிவுகள் பொதுப்பணித்துறையின் பொறுப்பற்ற பணி

குலசேகரம், மே 29- பேச்சிப்பாறை அணையிலிருந்து வரும் சானல் கரை நெடுகிலும் உள்ள பாதையில் கண்ணாடி உடைசல்களுடன்கூடிய கழிவுகளை நிரப்பி பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறை இடையூறு செய்துள்ளது. பாதையை பயன்படுத்த முடியாமலும், குழந்தைகள் நடமாட முடியாமலும் திருநந்திக்கரை சானல்கரை பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.  குமரி மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக பேச்சிப்பாறை அணை விளங்குகிறது. பல்வேறு பகுதிகளின் குடிநீருக்கும், சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கான பாசன வசதிக்கும் இதன் கால்வாய் (சானல்) பயன்பட்டு வருகிறது. சானலின் இருபுறமும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். போக்குவரத்துக்கான வழித்தடமாகவும் சானல் கரை விளங்குகிறது. மழைக்காலங்களில் வெள்ளத்தில் அடித்துவரப்படும் கழிவுகளும் மது பாட்டில்களும் சானலின் உட்பகுதியில் பரவிக் கிடப்பது வழக்கம். தண்ணீர் நிறுத்தும்போது அவற்றை அகற்றி எப்போதாவது மராமத்து பணியை பொதுப்பணித்துறை மேற்கொள்வது உண்டு. அந்த கழிவுகளை குவித்து வைக்காமல் உடனடியாக அப்புறப்படுத்தி விடுவார்கள். 

இம்முறை சானலுக்கு உட்பகுதியில் இருந்து அள்ளப்பட்ட கழிவுகளும், பாட்டில் துண்டுகளும் அப்படியே கரையில் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. பாட்டில் துண்டுகள் பலரது கால்களை பதம் பார்த்துள்ளன. கழிவுகளால் சுகாதா ரக்கேடும் ஏற்பட்டுள்ளது. வீடுகளில் நிறுத்தப்பட்ட வாகனங்களை வெளியே எடுக்க முடியாத அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுப்ப ணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் தீர்வு ஏற்படாத நிலையில் காவல்துறையிலும் புகார் செய்துள்ளனர்  இப்பகுதி மக்கள். ஆனாலும், கழிவுகளை அகற்ற பொதுப்பணித்துறை முன்வரவில்லை.  இதுகுறித்து பொதுப்பணித்துறை இணை பொறியாளரிடம் கேட்டபோது, கழிவுகளை அகற்றும்போது தொழி லாளர்களின் கால்களில் பாட்டில் குத்தி வேலைக்கு வர முடியாமல் போனது. ரொம்ப சிரமப்பட்டு கரைக்கு கொண்டு வந்தாச்சு, நாளைக்கே அவற்றை அகற்று கிறோம் என தெரிவித்தார். தொடர்ந்து  பேசுகையில் உள்ளாட்சி அமைப்பிலேருந்து செய்யலன்னா நானே செய்கிறேன் என்றார். சிபிஎம் திருநந்திக்கரை கிளை செயலாளர் மோகனன் கூறுகையில், உடனடியாக கழிவுகளை அகற்றாவிட்டால் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.