காவல்துறையை திணறடிக்கும் கொள்ளையர்கள் அச்சத்தில் பெரம்பலூர் மக்கள்
பெரம்பலூர், மே 30-பெரம்பலூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது. இருசக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர்கள், முகவரி கேட்பது போல் நடித்து பல்வேறு பகுதிகளில் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செவ்வாயன்று இரவு பெரம்பலுரில் வடக்குமாதவி சாலையிலுள்ள, அசோக் நகரில் வசிப்பவர்கள் தினேஷ், அவரது மனைவி சத்தியபாமா (31). தினேஷ் ஆத்தூர்சாலையில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். வீட்டில் தனியாக இருந்த நிறைமாத கர்ப்பிணியான சத்தியபாமா, வீட்டின்காம்பவுண்ட் சுவர் கேட்டை பூட்டி விட்டு சாவியை கணவர்வந்து திறந்து கொள்வதற்கு ஏதுவாக, பூட்டிலேயே வைத்து விட்டு, காற்றோட்டத்திற்காக வீட்டின் முன் பகுதியில் தூங்கியுள்ளார்.இதனை சாதகமாக்கி கொண்ட கொள்ளையர்கள் சாவியை எடுத்து பூட்டை திறந்து, வீட்டினுள் சென்று பீரோவைஉடைத்து தலா ஒரு பவுன் கொண்ட இரண்டு மோதிரங்கள்,10 ஆயிரம் மதிப்புள்ள ஒரு வெள்ளி கொடி மற்றும் வெள்ளிபொருட்களை எடுத்துவிட்டு, சத்தியபாமாவின் கழுத்திலிருந்த 8 பவுன் தாலிச் செயினையும் பறித்துள்ளனர்.இதனால், திடுக்கிட்டு எழுந்த சத்தியபாமா சத்தம்போட்டுள்ளார். இதில் சுதாரித்துக் கொண்ட கொள்ளையர்கள்சங்கிலியை பறித்து கொண்டு, சத்தியபாமாவை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.இதுகுறித்து தகவலறிந்த தினேஷ், மனைவி சத்தியபாமாவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் மே 27 அன்று பெரம்பலூர் அருகே உள்ள நொச்சியம் கிராமத்தில் நைனாம்பாள் என்ற மூதாட்டியிடம் 6 பவுன் தங்க சங்கிலியை கொள்ளையர்கள் பறித்து சென்றுள்ளனர். தொடர் திருட்டு சம்பவங்களை திட்டமிட்டு செய்து வரும் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
குடிநீர் திட்டப் பணி ஆய்வு
நாகப்பட்டினம், மே 30- நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் வெண்மணி கிராமத்தில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 1,50,000 லிட்டர் கொள்ளளவு மேல்நிலைக் குடிநீர்த் தொட்டிப் பணியை ஆட்சி
யர் சுரேஷ்குமார் ஆய்வு செய்தார். தொடர்ந்து அனக்குடி கிராமத்தில் 2100 மீட்டர் நீள குடிநீர்க் குயாய் பதித்தல், சாட்டியக்குடியில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி, திருக்கண்ணங்குடி கிராம போர்வெல், வடக்குப் பனையூரில் குடிநீர் விரிவாக்கப்பணி உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தார்,
கோயில் விழா
முசிறி, மே 30-தொட்டியம் அருகே கோடியாம்பாளையம் மாரியம்மன் கோயில் மற்றும் கருப்பண்ணசுவாமி கோயில் தேர் திருவிழாநடைபெற்றது. தொட்டியம் அருகே கோடியாம்பாளையம் மாரியம்மன் மற்றும் கருப்பண்ணசுவாமி கோயிலில் நடைபெற்ற விழாவை முன்னிட்டு பல்வேறு அபிசேக ஆராதனை, பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் தொடர்ச்சியாக பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவில் முசிறி, தொட்டியம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வந்திருந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ரத்ததான முகாம்
முசிறி, மே 30-தா.பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததானம் முகாம் நடைபெற்றது. திருச்சி அரசு மருத்துவமனை, தாரா சமூக மேம்பாட்டு மையம் மற்றும் சமூக நிறுவனங்கள் இணைந்து ரத்ததான முகாமை நடத்தின. ரத்தம் தானம் வழங்குபவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கிராவல் மண் கடத்தல்
முசிறி, மே 30-தொட்டியம் பகுதியில் கனிமவளம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து வருவாய் துறையினர் தீவிரரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தொட்டியம் தோளுர்ப்பட்டி ஏரியில் அனுமதி பெறாமல் ஜெசிபி இயந்திரம் மூலம் இரண்டு டிராக்டர்களில் சிலர் கிராவல் மண் அள்ளி கொண்டிருந்தனர். அதிகாரிகளை கண்டதும் அந்த கும்பல் தப்பி ஓடியது. இதையடுத்து வருவாய் துறையினர் ஜெசிபி மற்றும் டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தொட்டியம் காட்டுப்புத்தூர் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
பள்ளி வாகனங்கள் ஆய்வு
கொள்ளிடம், மே 30- ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்துத்துறை அலுவலகத்திற்கு உட்பட்ட 36 பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆட்சியர் சிவராசு தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் பள்ளி வாகனங்களில் முதலுதவி பெட்டி, அவசர கால வழிகள், வேக கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வின் போது வட்டார போக்குவரத்து அலுவலர்(பொ) ஜெயதேவராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் சம்பத்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.