தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
புதுதில்லி,ஏப்.11- நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வு எழுதும் நகரங்களை மாற்றிக்கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வான ‘நீட்’ தேர்வு மே மாதம் நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில் அந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வு எழுதும் நகரங்களையும் மாற்றிக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய தேர்வு முகமையின் பொது இயக்குநர் டாக்டர் வினித் ஜோஷி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தவர்கள் தங்களுடைய ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தங்கள் எதுவும் இருந்தால், அதை திருத்தி கொள்ளலாம். மேலும் தேர்வு எழுதும் நகரங்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். தேசிய தேர்வு முகமையின் nta-n-eet.nic.in என்ற இணையதளத்துக்கு சென்று ஏப்ரல் 14 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கட்டணம் இல்லாமலும், இரவு 11.50 மணிக்குள் கட்டணத்தோடும் திருத்தி சமர்ப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களை nta-n-eet.nic.in, www.nta.ac.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.