தேசிய குற்ற ஆவண அறிக்கை
புதுதில்லி, அக்.23 - தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையில் கும்பல் கொலை, மதக்கொலைகள், கட்டப் பஞ்சாயத்துக் கொலை குறித்த தகவல்கள் இடம்பெறவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2017 ஆம் ஆண்டில் பதிவான குற்ற வழக்குகள் தொடர்பாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை வெளி யிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கும்பல் தாக்கி கொலை, மத சம்பந்தப்பட்ட கொலை, கட்டப் பஞ்சாயத்துகளால் உத்தரவிடப்பட்ட கொலைகள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களால் செய்யப்பட்ட கொலைகள் சேர்க்கப்படவில்லை. அறிக்கையில் சுற்றுச்சூழல், கொலை, கொள்ளை, சைபர் கிரைம் போன்ற குற்றங்கள் தொடர்பான புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் தேசிய குற்ற ஆவணக் காப்பக இயக்குநர் இஷ்குமாரின் தலைமையிலான குழுவின் கீழ் தான் பணியகம் கொலை என்ற பிரிவின் கீழ் திருத்தம் செய்து, மத காரணங்களுக்காக கும்பல் கொலை மற்றும் கொலைக்கான காரணங்களை சேர்த்தது. ஆனால் இந்த தரவுகள் வெளியிடப்படவில்லை. இந்த தரவுகள் தயாராக இருந்தது; முழுமையாக தொகுக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டது. இது வெளியிடப்படாததற்கான காரணம் உயர்மட்டத்தினருக்கு மட்டுமே தெரியும் என்று தரவு சேகரிப்பில் பணியாற்றியவர்கள் தெரிவிக்கின்றனர்.