tamilnadu

img

ஜனாதிபதி உரை நீதியின் குரல் அல்ல; அநீதியின் குரல்

மக்களவையில்  சு.வெங்கடேசன் சாடல்

புதுதில்லி, பிப். 5 - நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை  நீதியின் குரல் அல்ல; அநீதியின் குரல் என்றும் பாஜக அரசின் துப்பாக்கிகளையும் தோட்டாக் களையும் மலர்க்கொத்துக்களைக் கொண்டு எதிர்கொண்டு வருகிற மாணவப் போராளிகள்தான் இந்த நாட்டின் ஜனநாயகத்தின் அடையாளம் என் றும் மக்களவையில் சு.வெங்கடேசன் பேசினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடை பெற்று வருகிறது. மக்களவையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் புதனன்று (பிப்ரவரி 5) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பங்கேற்று பேசியதாவது:

ஆசிய வாசிகள் குடியேற்றச் சட்டம்

குடியரசுத் தலைவரின் உரையில் “குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் தேசத்தந்தை காந்தியினுடைய கனவை நாங்கள் நனவாக்கி இருக்கிறோம்”  என்று குறிப்பிட்டு இருக்கிறார். இது மிகப்பெரிய வரலாற்றுத் தவறாகும். உண்மை யில் குடியுரிமைச் சட்டத்தைப் போல ஒரு கொடுமை யான சட்டத்தை அன்றைய தென்னாப்பிரிக்கா வினுடைய காலனிய அரசு கொண்டு வந்தது. அதற்குப் பெயர் “ஆசியவாசிகள் குடியேற்றச் சட்டம்”. ஆசியாவிலே இருந்து குடியேறிய மக் களின் குடியுரிமையை பறிக்கிற மிகக் கொடுமை யான அந்தச் சட்டத்திற்கு எதிராகத் தான் அண்ணல் காந்தி முதன்முதலில் போராட்டக் களத்திலே குதித் தார்; சிறைக்குச் சென்றார். எனவே இந்தக் குடி யுரிமைச் சட்டத்தினை கொண்டு வந்ததன் மூலம் காந்தியின் கனவை நீங்கள் நிறைவேற்றவில்லை, மாறாக இந்தியாவில் வெறுப்பை விதைக்கிற கோட்சேவின் கனவைத் தான் நீங்கள் நிறை வேற்றி இருக்கிறீர்கள்.  அன்று காலனியவாதிகளுக்கு எதிராக மக்கள்  போராடினார்கள். இன்றைக்கு காலனியவாதி களுக்கு துணைநின்ற உங்களை எதிர்த்து மக்கள் போராடுகிறார்கள். மக்கள் தான் காந்தியின் கனவை நனவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எந்த மாண்பைக் கடைபிடித்தீர்கள்?

அதேபோல “இந்த மக்களவை மகத்தான மாண்புகளோடு புதிய சட்டங்களை இயற்றுகிறது” என்றும், “ஜனநாயகத்தில் இந்த மக்களவை ஒரு  புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது”  என்றும் குடி யரசுத் தலைவர் தனது உரையிலே குறிப்பிட்டார். இது மிகவும் வேதனையானது, எந்த மாண்பு இந்த மக்களவையிலே கடைபிடிக்கப்பட்டது?  முதல் கூட்டத் தொடரில் நிலைக்குழுக்களோ, ஆலோசனைக் குழுக்களோ அமைப்பதற்கு முன்பே ஒரு கூட்டத் தொடரையே நீங்கள் நடத்தி முடித்தீர்கள். சுமார் முப்பதுக்கும் மேற் பட்ட சட்டங்களை இயற்றினீர்கள் . இரண்டாவ தாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படு கின்ற  எந்த ஒரு மசோதாவின் நகலும் முறைப்படி, முன் கூட்டியே உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட வில்லை. உறுப்பினர்களின் கைகளில் மசோதாக் கள் கொடுக்கப்படும் முன்பே மசோதாக்களை தாக்கல் செய்கிறீர்கள் . இது தான் ஜனநாயக மரபா?  இதுவரை இயற்றப்பட்ட சட்டங்களில் எதிர்க்கட்சி களின் எந்த ஆலோசனையையாவது நீங்கள் செவி மடுத்திருக்கிறீர்களா? எதிர்கட்சி மட்டுமல்ல, இன்றைக்கு சமூகத்திலே இருக்கிற பல ஊடக வியலாளர்கள், அறிஞர்களுடைய எந்தக் கருத்தா வது இந்த அவையில் ஆளுங்கட்சியால் செவி மடுக்கப்பட்டிருக்கிறதா? கண்மூடித்தனமான மெஜாரிட்டியால் இந்த நாட்டைக் கூறுபோடுகிற சட்டங்களைத் தான் நீங்கள் இயற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.

யார் வன்முறையாளர்கள்?

குடியரசுத் தலைவர் அவர்ளே, நாட்டுக்காக,  மக்களுக்காக போராடுபவர்களை ‘வன்முறை யாளர்கள்’ என உங்கள் உரையில் வர்ணிக்கிறீர்கள். உண்மையில் வன்முறையாளர்கள் யார்? கொடிய வன்முறைக்கான வித்தைத் தூவியவர்கள் எல்லாம்  நீங்கள் இந்த உரையை நிகழ்த்திய போது உங்கள் கண்களுக்கு நேரெதிரே தான் உட்கார்ந்திருந் தார்கள். போராடுபவர்களை சுட்டுத் தள்ளுவோம் என்று சொன்ன மத்திய இணையமைச்சர், நீங்கள் பேசிக் கொண்டிருந்த பொழுது உங்களுக்கு நேர்  எதிரே தான் உட்கார்ந்திருந்தார். போராடுகிற மக்களை இந்த நாட்டை விட்டே அப்புறப்படுத்துங் கள் என்று சொன்ன உறுப்பினர்கள் உங்களுக்கு எதிரே தான் உட்கார்ந்திருந்தார்கள். போராடு பவர்களை பழி தீர்ப்பேன் என்று சொன்ன உ.பி. முதலமைச்சர் தில்லியிலே இருந்து மிக அருகிலே தான் இருக்கிறார். உண்மையில் இவர்கள் தான் வன்முறையாளர்கள். ஆனால் இவர்களை உங்கள் ஆட்சியினுடைய அலங்காரங் களாக, அடையாளங்களாக நீங்கள் முன் வைக் கிறீர்கள். ஆனால் அதற்கு மாற்றாக கொடுமை யான தாக்குதலுக்கு உள்ளான பொழுதும் மண்டை உடைக்கப்பட்டு, கை முறிக்கப்பட்ட பிறகும்  உங்களின் வன்முறையை எங்களின் கருத்துகளின்  மூலம் எதிர்கொள்வோம் என்று சொன்ன “அய்ஷே  கோஷ்”  தான் உண்மையில் இந்த நாட்டின்  ஜனநாயகத்தின் அடையாளம் . தோட்டாக்களை யும், துப்பாக்கிகளையும் மலர்கொத்துகளைக் கொண்டு எதிர்கொண்டு வந்திருக்கிற மாணவர்  சங்கத்தினுடைய போராளிகள் தான் இந்த நாட்டி னுடைய ஜனநாயகத்தின் அடையாளம். இருநூறுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் இன்று  போராட்டத்தை முன்னடத்திக் கொண்டி ருக்கிற இந்தியாவின் புதிய நம்பிக்கையான மாணவர்கள் இந்த நாட்டினுடைய ஜனநாயகத்தின் அடையாளம் என்பதை இன்றைக்கு  நான் நினைவுபடுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். 

நம்மிடம் என்ன நீதி உள்ளது?

பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு இழைக்கப்படுகிற அநீதியை உலக அரங்கில் கொண்டு செல்வோம் என்று கூறுகிறீர்கள். ஆனால் உலக அரங்கமே இன்றைக்கு இந்தியா வில் சிறுபான்மையினருக்கு இழைக்கப்படுகிற அநீதியைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக் கிறது. அடுத்தவனின் அநீதியைப் பற்றி பேச நம்மிடம் என்ன நீதி இருக்கிறது என்பதை யோசிக்க வேண்டும். இந்த அரசு என்ன நீதியை வழங்கியது? காஷ்மீர் மக்களுக்கு நீங்கள் என்ன நீதியை வழங்கியிருக்கிறீர்கள்?

மூன்று முதலமைச்சர்கள் உள்ளிட்டு எல்லா அரசியல் தலைவர்களும் சிறைச்சாலைக்குள் இருக்கிறார்கள். இதுதான் நீங்கள் வழங்கியுள்ள நீதியா? இந்திய சிறுபான்மையினருக்கு நீங்கள் என்ன நீதியை வழங்கியிருக்கிறீர்கள்? குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடி யதற்காக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் உங்களது மாநில அரசுகள் முப்பது பேரை சுட்டுத்தள்ளி இருக்கின்றன. இது தான் இந்திய மக்களுக்கு நீங்கள் வழங்கிய நீதியா? மேதகு குடியரசுத் தலைவர் அவர்களே உங்களது உரையில் படிந்திருந்தது நீதியின் குரல் அல்ல; அநீதியின் குரல் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.



 

;