புதுதில்லி, ஜுன் 16- தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சிப்பணிகளில் கேரளத்தின் பிரச்சனைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும் என மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் உறுதி அளித்தார். மத்திய அமைச்சர் கட்காரியுடன் சுமார் ஒரு மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் ஏராளமான கருத்துகள் பரிமாறப்பட்டதாக முதல்வர் தெரிவித்தார். சில அறிவுறுத்தல்கள் எளிதில் நிறைவேற்றத்தக்கவை. மற்ற சிலவற்றில் மாநிலத்தில் மேலும் விவாதித்து மீண்டும் மத்திய அரசை அணுக வேண்டும். மாநிலத்தில் 600 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சிக்கு ரூ.44000 கோடி செலவாகும். கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு மற்ற மாநிலங்களைவிட நான்கு மடங்குவரை அதிக விலையை கேரளத்தில் கொடுக்க வேண்டியதாக உள்ளது. இந்த பிரச்சனை ஏற்கனவே விவாதித்து தீர்வு காணப்பட்டதாகும். ஆனால் உயர்ந்துள்ள நிலத்தின் விலை தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மீண்டும் திட்டத்தை தடுப்பதற்கான வாதங்களை முன்வைக்கிறது. நிலம் கையகப்படுத்த தேவையான நிதி தொடர்பான அறிவுறுத்தல்கள் மாநிலத்தில் விவாதிக்க வேண்டியிருக்கிறது. கேரளத்தின் தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சியில் மத்திய அரசு உறுதியுடன் இருப்பதாக அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.