tamilnadu

img

ஆதார் சட்ட திருத்த மசோதா உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது

ஆதார் திருத்தச் சட்டமுன்வடிவு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறும் ஒன்றாகும் என்றும் எனவே இதனை எங்கள் கட்சியின் சார்பில் கடுமையாக எதிர்க்கிறோம் என்றும் மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கூறினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வியாழன் அன்று 2019ஆம் ஆண்டு ஆதார் மற்றும் இதர சட்டங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவின் மீதான விவாதம் நடைபெற்றது. அதில் பங்கேற்று உரைநிகழ்த்தும்போதே பி.ஆர். நடராஜன் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

2019ஆம் ஆண்டு ஆதார் மற்றும் இதர சட்டங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவின் மீதான விவாதத்தில் பங்கேற்பதற்கு வாய்ப்பளித்தமைக்கு முதற்கண் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திருத்தச் சட்டமுன்வடிவு, ஆதார் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மீறுகின்ற ஒன்றாகும். இந்தியவாழ் மக்களின் தரவுகள் மற்றும் அந்தரங்கங்களை எவர்வேண்டுமானாலும் பார்க்கக்கூடிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. இந்தச் சட்டமுன்வடிவை உருவாக்குவதில் வெளிப்படைத்தன்மை இன்மை, நாடாளுமன்றக் குழு எதனிடமும் கலந்தாலோசனை செய்யாமை முதலானவை அனைத்தும் வெளிப்படையாகவே தெரிகின்ற விடுபடுதல்களாகும். எனவே, எங்கள் கட்சியின் சார்பாக இதனை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

இந்தச்சட்டமுன்வடிவு, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான ஒன்று. இது தொடர்பாக நம்முன் உள்ள பிரச்சனை இதில் உள்ள தரவுகள் ஒருவரின் மனமார்ந்த விருப்பத்தின் அடிப்படையில் தாமாகவே முன்வந்து அளிக்கப்படுபவைகளா (voluntary) அல்லது கட்டாயமாக அளிக்கப்பட வேண்டியவைகளா (mandatory) என்பதாகும். அரசாங்கத்தின் கூற்றுப்படி இது மக்களால் தாமாகவே முன்வந்து அளிக்கப்படுபவைகளாகும். ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி உட்பட அரசாங்கத்தின் அனைத்து அமைப்புகளும், இதில் உள்ள தரவுகள் கட்டாயமாக அளிக்கப்பட வேண்டியவை என்று வலியுறுத்துகின்றன. எனவேதான், இதனை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது என்று கூறுகிறோம்.   

இந்தச்சட்டமுன்வடிவில் காணப்படுகின்ற பிரச்சனைகளுக்குரிய சில பிரிவுகளை அவையின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். முதலாவதாக, ஆதார் சட்டமுன்வடிவின் 4ஆவது பிரிவின் 7ஆவது உட்பிரிவு மற்றும் இந்திய டெலிகிராப் சட்டத்தின் 4ஆவது பிரிவின் 24ஆவது உட்பிரிவு ஆகியவையும் மற்றும் 2002ஆம் ஆண்டு பண மோசடி தடைச்சட்டம் (Prevention of Money Launderi8ng Act) 11-A பிரிவின் 25ஆவது உட்பிரிவின்கீழ் புதியதொரு பிரிவு சேர்க்கப்பட்டிருப்பதும் – ஆகிய இவை அனைத்தும் தனியார் நிறுவனங்கள் ஆதாயம் அடைவதற்காகவே கொண்டு வரப்பட்டிருப்பவைகளாகும்.  எனவேதான் இதனை நாங்கள் எதிர்க்கிறோம். இந்தச் சட்டமுன்வடிவானது, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைப் புறந்தள்ளிவிட்டு, ஆதார் தரவுகளை தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து  பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதிக்கிறது. இது முற்றிலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானதாகும். இவ்வாறு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறும் விதத்தில் இச்சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டிருப்பதானது அரசின் நோக்கத்தை நன்கு பிரதிபலிக்கிறது.

அடுத்ததாக, குடிமக்களின் அந்தரங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இச்சட்டமுன்வடிவு எதுவும் குறிப்பிடவில்லை. தனிப்பட்டவர்களின் சொந்தத் தரவுகள் பாதுகாப்புச் சட்டம் (Personal data protection law) போன்று சிறப்புச்சட்டம் (Special Lzw) இருந்திட வேண்டும். அவ்வாறு எதுவும் தற்போது இல்லை. இதுதொடர்பாக பொதுக் கலந்தாலோசனை எதுவும் முறையாக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை. எனவே இச்சட்டமுன்வடிவை நாங்கள் எதிர்க்கிறோம்.

இவ்வாறு பி.ஆர். நடராஜன் பேசினார்.

(ந.நி.)