tamilnadu

img

தில்லிக் கலவரங்கள் குறித்து நீதித்துறை மற்றும் கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணை தேவை அமித் ஷா ராஜினாமா செய்திட வேண்டும் -ஏ.எம். ஆரிப்

தில்லி வன்முறை வெறியாட்டங்கள் அரசால் ஏற்பாடு செய்யப்பட்டதாகும். எனவே, இது தொடர்பாக ஒரு நீதித்துறை மற்றும் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தேவை. இந்த விசாரணைமுடியும் வரையிலும், உள்துறை அமைச்சர் அவருடைய நிலையிலிருந்து விலக வேண்டும். அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் வழக்குரைஞர் ஏ.எம். ஆரிப் கூறினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் புதனன்று, தில்லிக் கலவரங்கள் தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று ஏ.எம். ஆரிப் பேசியதாவது:

1984 சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைக் கலவரங்களை அடுத்து, அதேபோன்றதொரு நிலைமையை இப்போது தில்லி பார்த்திருக்கிறது. குறைந்தபட்சம் 53 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருக்கிறார்கள். நம் நாட்டில் ஜனநாயகம் மிகவும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. அரசாங்கம், நம் ஜனநாயகத்தின் நான்கு தூண்களான - நாடாளுமன்றம்/சட்டமன்றம், அரசு நிர்வாகம், நீதித்துறை மற்றும் நான்காவது தூண் என அழைக்கப்படும் ஊடகங்கள் - என அனைத்தும்  அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறது. இவை அனைத்தையும் சமீபத்தில் நடைபெற்ற தில்லிக் கலவரங்களில் பார்க்க முடிந்தது.

கலவரங்கள் தொடங்குவதற்கு முன்னர் ஷாஹீன்பாக் சென்றிருந்தேன். அங்கே மூன்று துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்றிருந்த போதிலும், அது அமைதியான கிளர்ச்சிப் போராட்டமாகவே இருந்தது. கிளர்ச்சியாளர்கள் எவ்விதமான வன்முறை நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. பின்னர் கலவரம் நடைபெற்ற இடங்களுக்கும் சென்றேன். அங்கே வாழ்ந்துவந்த இந்து மக்களிடமும், முஸ்லீம் மக்களிடமும் பேசினேன். நாங்கள் அங்கே இதுநாள்வரையிலும் அமைதியாகத்தான் வாழ்ந்து வந்திருக்கிறோம் என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

உத்தரப்பிரதேசத்திலிருந்து வரவழைக்கப்பட்டவர்கள், வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டார்கள். தில்லி ஒரு கொலைக்களமாக மாறியது. இவ்வாறு வன்முறையில் ஈடுபட்டவர்கள் ஒரு சமூகத்தினருக்கு எதிராகத் தாக்குதலை நடத்தினார்கள். ஒரு சமூகத்தினருக்கு எதிரான வழிபாட்டுத் தளம் மட்டும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. எனவே, இது 1969 மற்றும் 2002களில் குஜராத்தில் நடைபெற்றதைப்போல, முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.

நீங்கள், இங்கே தேவையற்ற முறையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் பல சட்டங்களை நாடாளுமன்றக் குழுக்களில் விவாதம் எதுவும் நடத்தாமலேயே நிறைவேற்றி இருக்கிறீர்கள். இவ்வாறு இக்கூட்டத்தொடரின் முதல் அமர்வில் உங்களிடம் உள்ள பெரிய அளவிலான பெரும்பான்மையை வைத்துக்கொண்டு 37 சட்டமுன்வடிவுகளை நிறைவேற்றி இருக்கிறீர்கள். இவற்றை நிறைவேற்றி யிருப்பதன் மூலம், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை நீங்கள் குறி வைத்திருக்கிறீர்கள். மதவெறித் தீயை விசிறிவிடுவதன் மூலமாக மக்கள் இடையே பகைமையை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இது, ஜனநாயகத்தின் அடிப்படைத் தூணாக விளங்கும் நாடாளுமன்ற/சட்டமன்ற அமைப்பைச் சீர்குலைப்பதையே காட்டுகிறது. நீங்கள் அரசமைப்புச்சட்டத்தின் மதச்சார்பின்மையையே கொன்று கொண்டிருக்கிறீர்கள்.

இப்போது, ஜனநாயகத்தின் அடுத்த தூணாக விளங்கும் நீதித்துறைக்கு வருகிறேன். தில்லிக் கலவரங்களின்போது, தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர், வெறுப்பை உமிழ்ந்த பாஜக தலைவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டபோது, இந்த அரசாங்கம் அவரை அன்றையதினம் நள்ளிரவிலேயே மாற்றல் செய்தது. அவரது மாற்றல் தொடர்பாக ஏற்கனவே பிறப்பித்த உத்தரவைத்தான் அன்றையதினம் நடைமுறைப்படுத்தியதாக நியாயம் கற்பிக்கப்படுகிறது.  வழக்கு மற்றொரு நீதிபதியின் அமர்வுக்குப் போகிறது. அவர், இந்தக் கலவரங்கள் தொடர்பாக உடனடியாக எந்த வழக்கும் பதிவு செய்ய வேண்டாம் என்று உத்தரவிடுகிறார். இந்த நடவடிக்கையின் மூலம், இந்த அரசாங்கம் நீதித்துறையையும் கொன்றிருக்கிறது. மக்கள், நீதித்துறையின்மீது நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். இது, ஜனநாயகத்தின் மற்றொரு தூண் சீர்குலைந்திருப்பதைக் காட்டுகிறது.

இப்போது, ஜனநாயகத்தின் மூன்றாவது தூணாக விளங்கும் அரசு நிர்வாகத்திற்கு  (executive) வருகிறேன். நாட்டின் தலைநகரில் நடைபெற்றுவரும் தொடர் வன்முறை நிகழ்வுகள் அனுராக் தாகூர் போன்ற மத்திய அமைச்சர்கள் மற்றும் …(பதிவு செய்யப்படவில்லை) போன்ற பாஜக தலைவர்களின் வெறுப்புப் பேச்சுக்களின் விளைவாகும். தில்லியில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்கள், தில்லிக் காவல்துறையினரின் மிகப்பெரிய தோல்வியாகும். இரண்டு நாட்கள், தில்லிக் காவல்துறை முறையாகத் தலையிடாதது மட்டுமல்ல, அவர்கள் வன்முறையாளர்களுக்கு ஆதரவாக நின்றனர். இதேபோன்ற காவல்துறையினரின் செயலின்மையை நாங்கள் இதற்கு முன் ஜேஎன்யு விடுதி முகமூடி அணிந்த ரவுடிகளால் தாக்கப்பட்ட சமயத்திலும், ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்திலும் மற்றும் பல இடங்களில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களின்போதும் பார்க்க முடிந்தது. இது, இவ்வாறு அரசு நிர்வாகமும் சீர்குலைந்திருப்பதைக் காட்டுகிறது.

நிறைவாக ஊடகங்கள் எனப்படும் நான்காவது தூணுக்கு வருகிறேன். அவை, வழிபடும் இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதை உயர்த்திப் பிடித்ததாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு சார்பாக இருப்பதாகவும் கூறி, இரு கேரள தொலைக்காட்சி சானல்கள், ஆசியா நெட் மற்றும் மீடியா ஒன் ஆகியவை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் தடை செய்யப்பட்டன. இது, ஜனநாயகத்தின் நான்காவது தூணும் சீர்குலைக்கப்பட்டதைக் காட்டுகிறது.

தில்லி வன்முறை வெறியாட்டங்கள் அரசால் ஏற்பாடு செய்யப்பட்டதாகும். எனவே, இது தொடர்பாக ஒரு நீதித்துறை மற்றும் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தேவை. இந்த விசாரணைமுடியும் வரையிலும், உள்துறை அமைச்சர் அவருடைய நிலையிலிருந்து விலக வேண்டும். அவர் ராஜினாமா செய்ய வேண்டும். மத்திய அரசாங்கம் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு புனர்வாழ்வுக்காக தேவையான நிதி உதவி செய்திட வேண்டும். வன்முறை வெறியாட்டங்களுக்கு வழிவகுத்த தலைவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு ஆரிப் பேசினார்.

(ந.நி.)