புதுதில்லி:
மதச்சார்பின்மை என்ற அம்சம்,இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப்பாக இருப்பதால், அதில் அரசாங்கத்தால் திருத்தம் செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தெரிவித்துள்ளார்.அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், இதுதொடர்பாக அவர் மேலும் பேசியிருப்பதாவது:
இந்திய அரசியல் சாசனத்தில், ‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தை முன்னுரையில் இடம்பெற்றுள்ளது. இதுதான், இந்திய அரசியல் அமைப்பின் அடிப்படைக் கட்டுமானம். அதை ஒரு பெரும்பான்மைஅரசாங்கத்தால் மாற்றிவிட முடியாது. இதனை உச்ச நீதிமன்றத்தின் 13 நீதிபதிகள் அடங்கிய அமர்வும் உறுதி செய்துள்ளது. நெருக்கடி நிலைக்குப் பிறகு,இந்தச் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தது. எனவே, இந்த வார்த்தையை அரசியல் சட்டத்தின் முன்னுரைதவிர வேறு எந்த இடத்திலும் காணமுடியாது.சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியதுபோல, இதை நீக்கிவிட முடியாது.அப்படியே செய்ய வேண்டுமானாலும், அரசியல் சாசனத்தில் திருத்தம்செய்ய 15 நீதிபதிகள் அடங்கிய அமர்வு வேண்டும்.
இந்தியாவின் கட்டுமானம், ‘இறையாண்மையுள்ள, சமதர்ம, மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு’ என்பதில்தான் அடங்கியிருக்கிறது. அதனால்தான் இவற்றை நாட்டின் அடிப்படைக் கட்டுமானங்கள் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆகவே, ஒரு பெரும்பான்மை பலம்பெற்ற அரசாலும் இதில் திருத்தம் செய்ய முடியாது. இவற்றையெல்லாம் கருதித்தான், குறிப்பிட்ட அம்சங்களை நாடாளுமன்றத்தால் திருத்த முடியும்; குறிப்பிட்ட அம்சங்களை நாடாளுமன்றத்தால் கூட திருத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. நல்வாய்ப்பாக, மதச் சார்பின்மை என்பது அடிப்படை அம்சமாக இடம்பெற்றிருப்பதால், அதை ஒன்றும் செய்ய முடியாது. இவ்வாறு குரியன் ஜோசப் பேசியுள்ளார்.