கடல் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் சென்னை, மும்பை ஆகிய நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
புவிவெப்பமயமாதல் காரணமாக புயல்தாக்கம் போன்ற தீவிர பாதிப்புகள் இந்த நூற்றாண்டில் பலமுறை வருடத்திற்கு ஒரு முறை நிகழக்கூடும் என்ற காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அரசு குழு மொனகோவில் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.
காலநிலை மாற்றம் காரணமாக இமயமலை பனிப்பாறைகள் உருகுவதால் 2100 ம் ஆண்டுக்குள் சென்னை மூழ்கும் அபாயம் உள்ளது. கடல் மட்டம் 50 சென்டி மீட்டர் உயர்ந்தால் கூட சென்னையில் வெள்ளத்தால் சேதம் ஏற்படும் என்ற நிலையல் 2100ம் ஆண்டுக்குள் ஒரு மீட்டர் அளவுக்கு கடல் மட்டம் உயரும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் 45 கடலோர துறைமுக நகரங்களுக்கு ஆபத்து ஏற்படலாம். சென்னை, மும்பை, கொல்கத்தா, சூரத் ஆகிய 4 முக்கிய நகரங்களில் கடல்நீர் புகும் அபாயம் உள்ளது. மேலும், புவி வெப்பமயமாதலே கடல் வெப்பமடைவதற்கு காரணம் என்றும், கடல்நீர் மட்டம் உயர்வதால் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் உடனடியாக பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான கடலோர பகுதிகள், சிறிய தீவுகள், சிறிய கடலோர கிராமங்கள் நீருக்குள் மூழ்கிவிடும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.