வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதமானது 4.9 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்படுவதாக மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக பொதுமக்கள் தங்கள் வருமானத்தை இழந்து வீடுகளில் முடங்கி உள்ளனர்.
அனைத்து தொழில் துறை கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது. இதையடுத்து , மத்திய மாநில அரசுகள் நிதி சலுகைகளை வழங்க வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறியதாவது:- “ ரெப்போ வட்டி விகிதம் 4.9 சதவிகிதத்தில் இருந்து 4.4 ஆக குறைக்கப்படும். ரிவர்ஸ் ரெப்போ 90 புள்ளிகள் குறைக்கப்பட்டு 4 சதவீதமாக நிர்ணயம் செய்யப்படுகிறது. பொருளாதார ஸ்திரதன்மையை காக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம். பொருளாதார வீழ்ச்சியை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இதுபோன்ற நிச்சயமற்ற தன்மை இதுக்கு முன்பு இருந்ததில்லை. பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்வோம்.”என்றார்.
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் தனிநபர்கள், பொது நிறுவனங்கள் வாங்கியுள்ள கடன்களுக்கான தவணைகளைச் செலுத்த 3 மாதங்கள் வரை வங்கிகள் கால அவகாசம் அளிக்கலாம். வங்கிக் கடன் நிலுவைகளுக்கு 3 மாதம் கழித்து தவணை செலுத்த வங்கிகள் அனுமதிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.