மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் சட்ட மன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விளை பொருள் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் ஆகியவற்றிற்கு நாடு முழுவதும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதிய சட்டங்களை நிறைவேற்றுமாறு காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தியது. இந் நிலையில், பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கூடிய சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மாநில அரசு சார்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக 3 மசோதாக்களை முதல்வர் அமரீந்தர் சிங் அறிமுகப்படுத்தினார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது
இதுகுறித்து அமரீந்தர் சிங் கூறும்போது, “வேளாண் சட்ட விவகாரத்தில் மத்திய அரசு நடந்து கொள்வது விசித்திரமாக உள்ளது”
மேலும் இந்த 3 சட்டங்களும் பஞ்சாப் அரசு மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தொடுக்கும் சட்டப்போராட்டத்தின் அடிப்படையை வழங்கும் என்றார்.
“மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களும் முன்மொழியப்பட்ட மின்சார திருத்தச் சட்ட மசோதாவும் நிலமற்ற கூலிகளுக்கும், விவசாயிகளுக்கும் எதிரானது. இதோடு மட்டுமல்லாமல் பஞ்சாப் மட்டுமல்லாது பசுமைப் புரட்சிக்குப்பிறகு மேற்கு உ.பி, ஹரியாணா ஆகியவற்றிலும் நீண்ட காலமாக வேளாண் பொருட்கள் விற்பனை அமைப்பு முறை நன்றாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மத்திய அரசு விவசாயச்சட்டங்களை இயற்றவில்லை மாறாக வாணிபச் சட்டங்களைத்தான் இயற்றியுள்ளது.
மேலும் வேளாண்மை என்பது மாநிலங்களுக்குரியது. இந்தச் சட்டங்கள் மாநில உரிமைகள் மீது ஆக்ரமிப்பு செலுத்தி அனைத்தையும் பறிப்பதாகும். அரசியல் சாசன சட்டத்துக்கு விரோதமானது” என்று பஞ்சாப் அரசு தனது 3 வேளாண் சட்ட வரைவில் தெரிவித்துள்ளது.