tamilnadu

img

மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவுக்கு இட ஒதுக்கீடு இல்லை -மத்திய அரசு

மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

‘முதுநிலை மருத்துவ படிப்பில் 50 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி அதிமுக, திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். வழக்கு விசாரணையின் போத  இடஒதுக்கீடு அடிப்படை உரிமையின் கீழ் வராது கூறிய உச்சநீதிமன்றம், மாநில அரசின் கொள்கை என்ற அடிப்படையில் தமிழகம் தொடர்பான இடஒதுக்கீட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக  அறிவுறுத்தியது. பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனையடுத்து, இடஒதுக்கீடு விவகாரம் குறித்து முடிவெடுக்க மாநில அரசு மற்றும் எம்.சி.ஐ. அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்து முடிவெடுக்க வேண்டும். 3 மாதத்தில் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே, மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவுக்கு 50% இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கால தாமதம் தேவையில்லாதது. 50% இடஒதுக்கீட்டை நடப்பாண்டிலேயே  அமல்படுத்த வேண்டும் என்றும் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரசியல் கட்சிகள் சார்பில், 50% இடஒதுக்கீடு இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்துவது சட்ட சிக்கல் இருக்கிறது என்று வாதிடப்பட்டது. இருப்பினும், கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை. இன்றைய விசாரணைபோதும், மத்திய அரசு சார்பில் அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து, 50% இடஒதுக்கீடு இந்த ஆண்டே நடைமுறைப்படுத்துவது குறித்தும், தமிழகத்தைச் சேர்ந்த பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அமல்படுத்துவது பற்றியும் மத்திய அரசு வரும் வெள்ளிக்கிழமை பதிலளிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 
இந்நிலையில் மருத்துவ மேற்படிப்பில் 50 சதவிகிதம் 27 சதவிகிதம் என எதையும் இந்த ஆண்டு வழங்க முடியாது என்று மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.