tamilnadu

img

சீத்தாராம் யெச்சூரி மீது குற்ற அறிக்கை: மக்களவையில் ஒத்திவைப்புத் தீர்மானம் - பி.ஆர். நடராஜன் தாக்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உட்பட சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் மீது பொய் வழக்கு தொடுத்திருப்பது குறித்து அவையின் பிற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க வேண்டும் என்று கோரி, ஒத்திவைப்புத் தீர்மானம் ஒன்றை மக்களவை சபாநாயகரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவைக் குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன் இன்று (வியாழக்கிழமை) அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள ஒத்திவைப்புத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, ஸ்வராஜ் அபியான் தலைவர் யோகேந்திர யாதவ், பொருளாதாரப் பேராசிரியர் ஜெயதி கோஷ், தில்லிப் பல்கலைக் கழகப் பேராசிரியர் அபூர்வானந்த், ஆவணப்படத் தயாரிப்பாளர் ராகுல் ராய் முதலானவர்களை 2020 பிப்ரவரியில் வட கிழக்கு தில்லியில் நடைபெற்ற மதவெறிக் கலவரங்களில் சதிசெய்தவர்களாகத் துணை குற்ற அறிக்கையில் குறிப்பிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தால் ஜனநாயகத்தின்மீது தாக்குதல் தொடுத்திருப்பதற்கு இந்த அவை ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திக் கொள்கிறது.

தில்லிக் கலவரங்கள் தொடர்பாக, தில்லிக் காவல்துறையினர் தாக்கல் செய்துள்ள குற்ற அறிக்கையில், கபில் மிஷ்ரா உட்பட பாஜக தலைவர்கள் மதவெறியைத் தூண்டும் விதத்தில் ஆத்திரமூட்டம் விதத்தில் பேசிய பேச்சுக்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதையும், கபில் மிஷ்ரா, “இந்தப் பகுதியில் உள்ள சாலைகளில் மக்களை அப்புறப்படுத்தாவிட்டால் நாங்கள் வீதிகளைத் தாக்க வேண்டியிருக்கும்” என்று தில்லிக் காவல்துறையினருக்கு கெடு விதித்திருந்தார் என்பதையும், அதன்பின்னர் சிலமணி நேரங்களில் இரு குழுக்களுக்கு இடையே மோதல்கள் வெடித்தன என்பதையும், அடுத்த சில நாட்கள் நடந்த மோதல்களில் 50 பேர் உயிரிழந்தனர் என்பதையும் இந்த அவை குறித்துக் கொள்கிறது.

சீத்தாராம் யெச்சூரி, முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவையின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுத் தலைவர் என்பதையும், நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு பல முக்கியமான பிரச்சனைகளைக் கொண்டு வந்தார் என்பதையும், பல முக்கியமான பிரச்சனைகளில் கேள்விகள் எழுப்பியிருக்கிறார் என்பதையும் இந்த அவை குறித்துக்கொள்கிறது.

மேற்படி வகுப்புக் கலவரங்கள் நடைபெற்ற சமயத்தில், முஸ்லீம்கள் அதிகம் வாழ்ந்த பகுதிகளில் வன்முறை நடைபெற்ற சமயங்களில் தில்லிக் காவல்துறையினர் அவற்றைத் தடுத்திட எவ்வித நடவடிக்கையும் எடுக்காது செயலற்று இருந்தனர் என்றும் பல இடங்களில் அக்கலவரங்களில் ஈடுபட்டவர்களுக்கு உடந்தையாக இருந்தார்கள் என்றும், கலவரங்கள் நடைபெற்றவுடன் அந்தப் பகுதிக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்களின் உண்மை அறியும் குழுக்கள் வெளிப்படுத்தி இருப்பதையும் இந்த அவை குறித்துக் கொள்கிறது.

நரேந்திர மோடி அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கை, அரசமைப்புச் சட்டத்தின் 19(1)(a) பிரிவு அனைத்துக் குடிமக்களுக்கும் வழங்கியுள்ள பேச்சுரிமை, கருத்துரிமை மீதான மீதான நேரடித் தாக்குதல் என்பதையும், இந்த அவை குறித்துக் கொள்கிறது. 

தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட இனத்தினரின் பிரச்சனைகளுக்கு ஆதரவு தெரிவித்திடும் அறிவுஜீவிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் நரேந்திர மோடி அரசாங்கத்தாலும், பாஜக மாநில அரசாங்கங்களாலும், தீய நோக்கத்துடன் குறிவைத்துத் தாக்கப்படுவது உக்கிரம் அடைந்திருப்பதையும்  இந்த அவை குறித்துக் கொள்கிறது. இது, மிகவும் குறிப்பிடத்தக்க அறிவுஜீவியான ஆனந்த் டெல்டும்டே,பேராசிரியர் ஹனிபாபு, மற்றும் இதரர்கள் பீகா கொரேகான் வழக்கில் நடத்தப்படும் விதம் உறுதிப்படுத்துகிறது என்பதையும் இந்த அவை குறித்துக்கொள்கிறது. அந்த நிகழ்வில் கலந்துகொள்ளாத போதும் ஆனந்த் டெல்டும்டே பொய்யாகப் பிணைக்கப்பட்டிருக்கிறார். ஆனந்த் டெல்டும்டே ஒரு மூத்த பேராசிரியர். விமர்சனரீதியான பல புத்தகங்கள் எழுதியிருக்கிறார். பேராசிரியர் ஹனி பாபு தில்லி பல்கலைக் கழகத்தில் உதவிப் பேராசிரியராக இருக்கிறார். பல்கலைக் கழகக் கல்வி மற்றும் சமூக நீதிக்கான போராட்டங்கள் மற்றும் கல்வி உரிமைக்கான போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறார். ஆட்சியாளர்களின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை விமர்சிப்பவர்கள் மீதும், தங்கள் ஆட்சிக்கு எதிராகக் கருத்துவேறுபாடு கொண்டிருப்பவர்கள் மீதும் அர்பன் நக்சல்கள் என்று முத்திரை குத்தி அவர்கள் மீது இத்தகைய தாக்குதல்கள் நடைபெற்றிருக்கின்றன. அஸ்ஸாமில் எண்பது வயதுக்கும் மேற்பட்டவரும் அறிவுஜீவியுமான ஹிரேன் கோஹேன் என்பவர் மீது வேறு சிலருடன் இணைத்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்தார் என்பதற்காக தேசத்துரோகக் குற்றப்பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தில்லிக் காவல்துறையினரின் நடவடிக்கைகளும் இந்து ராஷ்ட்ர எதேச்சாதிகாரத்திற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது என்பதையும் இந்த அவை குறித்துக் கொள்கிறது.

இவ்வாறு அந்த ஒத்திவைப்புத்தீர்மானத்தில் கூறப்பட்டிருக்கிறது.

(ந.நி