tamilnadu

img

51 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன விமானத்தின் பாகங்கள் கண்டெடுப்பு

இமாசலபிரதேசத்தில், கடந்த 51 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என் 12 விமானத்தின் பாகங்கள் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 1968-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்-12 பி.எல்-534 விமானம் இமாசலபிரதேச மாநிலத்தில் இமயமலையின் ரோஹ்டங் பாஸ் என்ற சிகர பகுதியில் காணாமல் போனது. இந்த விமானத்தில் பயணம் செய்த வீரர்களின் உடல்களை தேடும் பணி நடைபெற்று வந்தது. கடந்த ஜூலை மாதம் 26-ஆம் தேதி இதற்காகவே தாகா பனிச்சிகரத்தில் டோக்ரா சாரணர் குழு ஏற்படுத்தப்பட்டது. இந்த சாரணர் குழுவும், இந்திய விமானப்படையும் இணைந்து கடந்த 6-ஆம் தேதி மீண்டும் தேடுதல் வேட்டையில் இறங்கியது. இந்நிலையில், 13 நாட்கள் தீவிர தேடுதலுக்கு பிறகு அந்த விமானத்தின் என்ஜின், உடல் பகுதி, மின்சாதனங்கள், சுழல் விசிறி, எரிபொருள் டேங்க் பகுதி, ஏர் பிரேக் பகுதி, விமானி அறையின் கதவு ஆகிய பாகங்கள், 5240 மீட்டர் உயரமான தாகா பனிச்சிகரத்தில் கண்டெடுக்கப்பட்டன.

மேலும், அந்த விமானத்தில் பயணித்த சிலரது தனிப்பட்ட பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த பகுதியில் முன்பு ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக பனிக்கட்டிகளால் மூடப்பட்டு இருந்தது. இதனால் இந்த தேடுதல் பணி மிகவும் சிரமமாக இருந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.