tamilnadu

img

கந்து வட்டிக்கு எதிராய் கனன்றெழுந்த இந்து முஸ்லிம் விவசாயிகள் - சு.பொ.அகத்தியலிங்கம்

தன் தந்தையை எதிர்த்து அவர் பண்ணையில் வேலை செய்த விவசாயக்கூலிகளைத் திரட்டிப் போராடினார், வென்றார். 

சுவாமி சகஜானந்தா காவி உடையோடும் சிவப்புக் கொடியோடும் கடைசிவரை கம்யூனிஸ்ட் போராளியாய் இருந்தது பெரும் வரலாறு.

‘கந்துவட்டிக் கொடுமையை எதிர்த்து நின்றதால் படுகொலை செய்யப்பட்ட பள்ளிப்பாளையம் வேலுச்சாமி அண்மை வரலாறு. ஆனால் கந்துவட்டிக் கொடுமையை எதிர்ப்பதில் துவக்கம் முதலே அர்ப்பணிப்போடு ஈடுபட்டு வருவோர் கம்யூனிஸ்டுகளே! தொழிலாளர் விவசாயிகள் கட்சியின் தலைவர் பலர் கம்யூனிசத்தால் கவரப்பட்டனர். மேற்கு வங்கத்தில் தரணி கோஸ்வாமி போன்றோர் அதிக ஆர்வம் காட்டினர். தங்கள் தீவிரவாதத் தொடர்பையும் விடவில்லை. “இளம் தோழர்கள் கழகம்” என்ற பெயரில் வீரியமாய் செயல்பட்டனர்.  தரணி கோஸ்வாமி இன்னும் பலரோடு மீரட் சதி வழக்கில் 1929 மார்ச் 20 அன்று கைது செய்யப்பட்டார். ஆயினும் இளம் தோழர்கள் கழகத்தை உடைக்க பிரிட்டிஷ் ஆட்சியால் முடியவில்லை. 

நாகன் சர்க்கார், வாலி நவாஜ், சுபான்சு அதிகாரி, மொஹிந்தர சக்கரபர்த்தி போன்றோர் இக்கழகம் மூலம் விவசாயிகளிடையே தீவிரமாய் செயல்பட்டனர். விவசாயிகள் கலகம் வெடித்தது. ராஜ்சாஹி, மியான்சிங் ஆகிய இடங்கள் போராட்டக் களமாயின. கிஷோர்கஞ்ச் கொதிநிலையை எட்டியது.  குறிப்பாக அப்பகுதியில் கந்துவட்டிக்கு விடும் முஸ்லிம் - இந்து ஈட்டிக்காரர்களுக்கு எதிராய் இந்து – முஸ்லிம் விவசாயிகள் ஓரணி திரண்டனர். போராட்டம் தீவிரமானது. வட்டார பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு கடன் பத்திரங்களை அள்ளிப் போட்டு தீ வைத்துக் கொளுத்தினர். 

கிருஷ்ணராய் எனும் மோசமான ஈட்டிக்காரன் வீட்டையும் தாக்கித் தீ வைத்தனர். கிருஷ்ணராய் தன் அடியாட்களை ஏவி விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி  எட்டு பேரைக் கொன்று குவித்தான். ஆயினும் வீட்டினுள் புகுந்த விவசாயிகள் கடன் பத்திரங்களை மொத்தமாக அள்ளி வந்து தீவைத்தனர்.  இந்தப் போராட்டத்தை இந்து - முஸ்லிம் கலவரம் என பிரிட்டிஷ் அரசு சொல்லியது. காங்கிரஸ் கட்சியும் அதையே வாந்தி எடுத்தது. கம்யூனிஸ்ட் கட்சியும் முஸ்லிம் தேசபக்தர்களால் வழி நடத்தப்பட்ட ’நிகில் பங்கா பிரஜா சமிதி’யும் மட்டுமே போராட்டத்தை ஆதரித்தது வியப்பல்ல. 

இந்து - முஸ்லிம் இணைந்து போராடிய இந்த எழுச்சியில் சில மதவெறியர் உள்ளே புகுத்தப்பட்டனர். மத கலவரத்தை விசிறினர். நிகில் பங்கா பிரஜா சமிதியின் பல கிளைகள் சட்டவிரோதமென அரசால் அறிவிக்கப்பட்டது. போராட்டத்தை ஆட்சியாளர் சாமர்த்தியமாக மதக் கலவரமாக மாற்றிடினும், அடிப்படையில் கந்து வட்டிக்கு எதிராக இந்து - முஸ்லிம் விவசாயிகளின் எழிச்சியே இது.  இந்திய விடுதலைப் போர் நெடுக விவசாயிகள் எழுச்சி நடந்த வண்ணம் இருந்தன. அவுரி எனப்படும் சாயச் செடி பயிரிட மறுத்து வங்கத்தில் விவசாயிகள் கிளர்ந்தெழுந்தது தொடங்கி விடுதலைப் போரின் கடைசி கட்டத்தில் புன்னப்புரா, வார்லி, தேபாஹா, தெலுங்கானா போராட்டம் வரை நடந்த விவசாயப் போராட்டங்களை தனியே வரலாறாய் எழுத வேண்டும். அவ்வளவு முக்கியமானது. 

இந்த விவசாயப் போராட்டம் ஆதியில் தன்னெழுச்சியாய் எழுந்தவையே அதிகம். உள்ளூர் தலைவர்களே தலைமை ஏற்றனர். காங்கிரஸ் தலைவர்களும் கூட ஆரம்பத்தில் தலைமை ஏற்றதுண்டு. 1925க்கு பிறகு வங்கம், பஞ்சாப், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், கேரளம் போன்ற மாநிலங்களில் கம்யூனிஸ்டுகள் விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்தனர். விவசாயிகள் சங்கம் உருவானதே சுவாரசியமானது.  சுவாமி சகஜானந்தா பீகாரில் நிலப்பிரபு குடும்பத்தில் பிறந்தவர். இளமையில் சுக போகத்தில் மூழ்கியவர். பின்னர் வாழ்வில் கசப்பும் விரக்தியும் ஏற்பட்டு அமைதி தேடி சந்நியாசி ஆனார். பாத யாத்திரையாய் ஊர் ஊராய்ச் சென்ற சந்நியாசி விவசாயிகள் படும் பாட்டை கண்ணாரக் கண்டார். நொந்தார். வெந்தார். யோசித்தார். 1934 ஆம் ஆண்டு சில கோரிக்கைகளோடு பீகார் மாநில கிசான் சபா தோன்றியது. தன் தந்தையை எதிர்த்து அவர் பண்ணையில் வேலை செய்த விவசாயக்கூலிகளைத் திரட்டிப் போராடினார். வென்றார்.

இதற்கிடையில் காங்கிரஸ் சோஷலிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் சேர்ந்து விவசாயிகள் சங்கம் அமைக்க முனைந்தனர். 1936ல் லக்னோவில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற போது விவசாயிகளை திரட்டுவதில் ஆர்வம் உள்ளோர்களைத் தனியாகக் கூட்டினர். சுவாமி சகஜானந்தா தலைமையில் கூடிய இம்மாநாடு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தை பெற்றெடுத்தது. பேராசிரியர் என்.ஜி.ரங்கா [ஆந்திரா], இந்துலால் யக்னிக் [குஜராத்], மோகன்லால் கவுதம், கே.எம்.அஸ்ரப் [உ.பி], சோகன் சிங் ஜோஷ், அகமதுதின் [பஞ்சாப்], கமல் சர்க்கார், சிதின் பிராமணிக் [வங்கம்], ஜெயப்பிரகாஷ் நாராயணன், ராம் மனோகர் லோகியா  ஆகியோர் பொறுப்பேற்றனர். இந்த ரங்கா பின்னர் ராஜாஜியோடு சுதந்திராக் கட்சியில் ஐக்கியமானது தனிக்கதை. சுவாமி சகஜானந்தா காவி உடையோடும் சிவப்புக் கொடியோடும் கடைசிவரை கம்யூனிஸ்ட் போராளியாய் இருந்தது பெரும் வரலாறு.  இந்திய கம்யூனிச இயக்க வரலாற்றில் விவசாயிகளுக்கும் விவசாயிகள் சங்கத்துக்கும் தனி இடம் என்றென்றும் உண்டு. சாதியும் மதமும் பிற்போக்குத்தனங்களும் ஆழமாக வேர்விட்டிருக்கும் கிராமப்புறத்தின் முகத் தோற்றத்தை மாற்றிவிட்டால் இந்தியாவின் முகத் தோற்றமும் மாறிவிடும். இதற்கு இடையறாது பாடுபடுவோர் கம்யூனிஸ்ட்டுகளே!