மகத்தான ரஷ்யப் புரட்சி வெற்றி பெற்ற பின், அதைக்குறித்து பல்வேறு நாடுகளின் கவிஞர்கள், எழுத்தாளர்கள் அதற்குப் புகழ்மாலை சூட்டியுள்ளனர். ஆனால் சென்ற நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே ரஷ்ய நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வந்த தமிழகத்தின் மகாகவி சுப்ரமணிய பாரதியார் அந்த புரட்சி வெற்றி அடைந்த வுடனேயே வாழ்த்துப் பா பாடிய உலகின் முதல் கவிஞராவார். பத்திரிகையாளராக தன் வாழ்வைத் துவங்கியதி லிருந்து உலக அரசியலில் ஆர்வம் கொண்டிருந்த பாரதி, இரண்டு போராட்டங்களை உன்னிப்பாகக் கவனித்து வந்தார். ஒன்று, 700 ஆண்டுகளாக நடைபெற்று வந்த அயர்லாந்து விடுதலைப் போர், மற்றொன்று ஜார் மன்னனுக்கெதிரான ரஷ்ய மக்களின் போராட்டம். 1905ஆம் ஆண்டில் தன்னிடம் கோரிக்கை மனு அளிக்க வந்த ரஷ்ய மக்களை ஜார் மன்னன் நூற்றுக்கணக்கில் சுட்டுக் கொன்றதைக் கண்ட பாரதி, தான் நடத்தி வந்த ‘இந்தியா’ பத்திரிகையில் பின்வருமாறு எழுதினார்:
சுயாதீனத்தின் பொருட்டும் கொடுங்கோன்மை நாசத்தின்
பொருட்டும் நமது ருஷ்யத் தோழர்கள் செய்து வரும்
உத்தமமான முயற்சிகள் மீது ஈசன் பேரருள்
செலுத்துவாராக”
இச்சம்பவம் நடந்த 12ஆண்டுகளுக்குப் பின்னர் 1917ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரஷ்யாவில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடைபெற்று ஜார் மன்னன் பதவியிலிருந்து அகற்றப்பட்டு கெரன்ஸ்கி என்பவன் தலைமையில் அரசாங்கம் அமைந்தபோது, பாரதி தன் பத்திரிகையில் காக்காய் ‘பார்லிமெண்ட்’ என்ற கட்டுரையில் எழுதினார்: “கேட்டீர்களா, காகங்களே, அந்த ருஷ்யா தேசத்து ஜார் சக்கரவர்த்தியை இப்போது அடித்துத் துரத்தி விட்டார்களாம். அந்த ஜார் ஒருவனுக்கு மாத்திரம் கோடான கோடி சம்பளமாம்” இந்தக் கட்டுரையை பாரதி எழுதி 7 மாத காலத்திற்குள்ளாகவே அவ்வாண்டு நவம்பர் 7ஆம் தேதி மகத்தான ரஷ்யப் புரட்சி லெனின் தலைமையில் வெற்றி பெற்றது. அதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த பாரதி பாடினார்:
“மாகாளி பராசக்தி உருசிய நாட்
டினிற் கடைக்கண் வைத்தாளங்கே
ஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி
கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்...”
லெனின் புகழை பாரதி மற்றொரு பாடல் மூலம் வெளிப்படுத்துகிறார்: ‘காலைப் பொழுது’ என்ற பாடலில் குருவியும், காக்கையும் பேசிக்கொள்வது போலவும், குருவி அப்பொழுது ‘கற்றறிந்த காக்கையே பேசுக நீ’ என்பதாகவும். உடனே காக்கை பேசுவதாகவும் பாரதி ஒரு கவிதை எழுதியிருக்கிறார்:
“அப்போது காக்கை, அருமையுள்ள தோழர்களே செப்புவேன் கேளீர்! சில நாளாகக் காக்கையுள்ளே நேர்ந்த புதுமைகளை நீர் கேட்டறியீரோ? சார்ந்து நின்ற கூட்டமங்கு சாலையின் மேற்கண்டீரே? மற்றந்தக் கூட்டத்து மன்னவனை காணீரே? கற்றறிந்த ஞானி கடவுளையே நேரவான்; எழுநாள் முன்னே இறைமகுடந் தான் புனைந்தான் வாழியவன் எங்கள் வருத்த மெலாம் போக்கிவிட்டான் சோற்றுக்குப் பஞ்சமில்லை, போரில்லை, துன்பமில்லை போற்றற் குரியான் புதுமன்னன் காணீரோ?” என்று காக்கை மூலம் லெனினைப் புகழ்கிறார் பாரதி.
ரஷ்யா குறித்து வெளிவரும் தகவல்களை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு எதிரிகளை லெனின் சிரமத்துடன் சமாளிப்பதைக் கண்ட பாரதி லெனின் மேல் இரக்கம் கொண்டு கூறுகிறார்: “... பிறகு எனக்கு ருஷ்யக் குடியரசின் தலைவனாகிய லெனின் என்பவனுடைய ஞாபகம் வந்தது. உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி, ஸ்ரீமான் லெனினுக்கோ லட்சம் பக்கத்திலே....” 15 கோடி மக்களை ரஷ்யாவில் ஈர்த்துள்ள பொது வுடைமை லட்சியம் 30 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவிற்கு வந்தால் எத்தகைய புதுமை ஏற்படும் என்று கற்பனை செய்த பாரதி “பாரத சமுதாயம் வாழ்கவே.. வாழ்க வாழ்க...” என்ற பாடலில் பாடுகிறார்:
“பாரத சமுதாயம் வாழ்கவே- வாழ்க, வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே - ஜய ஜய ஜய ஜய
பாரத சமுதாயம் வாழ்கவே
முப்பது கோடி ஜனங்களின் சங்க
முழுமைக்குப் பொது உடைமை
ஒப்பி லாத சமுதாயம்
உலகத்துக் கொரு புதுமை - வாழ்க!
மனித ருணவை மனிதர் பறிக்கும்
வழக்க மினி யுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை மினி யுண்டோ?
இனியொரு விதி செய்வோம் - அதை
எந்த நாளுங் காப்போம்
தனி யொருவனுக் குணவில்லை யெனில்
ஜகத்தினை யழித் திடுவோம்
எல்லாரு மோர் நிறை எல்லாருமோர் விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர் நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்
பாரத சமுதாயம் வாழ்கவே! ஜய ஜய ஜய”
பாரத சமுதாயம் அவருடைய கடைசிப் பாடல்களில் ஒன்றாகும்.
ரஷ்யப் புரட்சியானது மாபெரும் மாறுதலை உருவாக்கப் போகிற மகத்தான சக்தி என்று பாரதி தன் வாழ்வின் இறுதி வரை உறுதியான நம்பிக்கை கொண்டி ருந்தார். அவர் மறைவதற்கு சில மாதங்கள் முன்பு, 1921ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ‘சுதேசமித்திரன்’ ஏட்டில் தான் எழுதிய கட்டுரையில் தனது ஆழ்ந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
“இந்தப் பூமியில் நாமே நெடுநாள் இருந்து பலவித நியாயங்கள்
நடந்து நிறைவேறுவதைப் பார்க்கப் போகிறோம்
“பூமியில் நல்ல யுகம் தோன்றப் போகிறது
“மனித ஜாதி முழுமைக்கும் விடுதலை உண்டாகப் போகிறது
“ருஷ்ய ராஜ்யப் புரட்சியானது இனி வரப்போகிற நற்காலத்தின் முன் அடையாளங்களில் ஒன்று. “பூமி தூளாகாது
“மனிதர் ஒருவருக்கொருவர் செய்யும் அநீதி தூளாகும்.”
இந்தக் கட்டுரைக்கான ஆதாரம் :
தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்