புதுதில்லி:
ஹத்ராஸ் சம்பவ வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் வீட்டிலிருந்து ரத்தக்கறை படிந்த துணிகளை சிபிஐ போலீசார் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் இளம்பெண்ணை உயர்சாதிக் குண்டர்கள் கொடூரமாக பாலியல் வன்கொலை செய்தனர். நாடு முழுவதும் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்தைக் கண்டித்தும் நீதி கேட்டும் நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பாலியல் வன்கொலை வழக்கை தில்லியில் உள்ள நீதிமன்றங்களில் ஏதேனும் ஒன்றிற்கு மாற்ற வேண்டும். தங்கள்குடும்பத்தினரையும் தில்லிக்கு மாற்றி, வேலைமற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றுகொலை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரர் கோரியுள்ளார். இச்சம்பவம் நடைபெற்ற கிராமத்தில் வெள்ளியன்று செய்தியாளர்களிடையே அவர்கூறுகையில், நாங்கள் இந்த வழக்கு தில்லியில்உள்ள நீதிமன்றம் ஒன்றில் விசாரிக்கப்பட வேண்டும். எங்களுக்குத் தில்லியில் வேலைவாய்ப்புகளும் அளிக்கப்பட வேண்டும் என்று கோருகிறோம். அரசாங்கம் இதற்கு உதவி செய்யுமானால் நல்லது என்று தெரிவித்தார்.
அக்குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு மற்றும் அக்குடும்பத்தின் தினசரித் தேவைகளைக் கவனித்து வரும் உட்கோட்ட நடுவர் (கோட்டாட்சியர்), அஞ்சலி கேங்வார் இது தொடர்பாகக் கூறுகையில், தான் பாதிப்புக்கு உள்ளான பெண்ணின் தந்தையைச் சந்தித்தேன். அவர்களுடைய குடும்பத்திற்குத் தேவையான ரேசன்பொருள்களையும், கால்நடைகளுக்குத் தீவனமும் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு முறையான மருத்துவப் பரிசோதனைகளும் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது. அக்குடும்பத்தார் காவல்துறையினரின் பாதுகாப்புடன் இயல்பு வாழ்க்கையைத் தொடங்க முடியும் என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ள மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகத்தின் (சிபிஐ) குழு, வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரில் ஒருவரான லவ் குஷ் சிகர்வார் என்பவர் வீட்டிலிருந்து ரத்தக்கறை படிந்த துணிகளைக் கைப்பற்றியிருக்கிறது. வியாழனன்று குற்றஞ்சாட்டப்பட்ட மற்ற 3 பேரின் இல்லங்களுக்கும் சென்றிருக்கிறது. இதுகுறித்து லவ் குஷ் சிகார்வார் குடும்பத்தினரிடம் சிபிஐ போலீஸார் கேட்டபோது, லவ் குஷ்ஷின் அண்ணன் ரவி சிகர்வார் பெயின்ட் பூசும் வேலை செய்பவர். அந்தத் துணிகளில் உள்ளது ரத்தம் இல்லை. அது வெறும் பெயிண்ட்தான் என்று தெரிவித்துள்ளனர். சிவப்பு நிறத் துணியை சிபிஐ அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக லவ் குஷ்ஷின் தம்பி லலித் சிகர்வார் தெரிவித்தார்.
மேலும் ஒரு சிறுமி பாலியல் வன்கொலை
இந்தச் சம்பவத்தின் விசாரணை நடந்துகொண்டிருக்கையிலேயே, உத்தரப்பிரதேச மாநிலம், பரபாங்கி மாவட்டத்தில் சத்ரிக் என்னுமிடத்தில் தலித் சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, பின்னர் கொல்லப்பட்ட சம்பவம் வெளிவந்திருக்கிறது. இதனைத் தெரிவித்தக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், ராம் சேவக் கவுதம், வன்புணர்வில் ஈடுபட்டது சம்பந்தமாக ஒருவன் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவன் பெயர் தினேஷ் கவுதம் (19) என்றும் அவன் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். (ந.நி.)