புதுதில்லி, ஜூலை 26-இலங்கையிலிருந்து இந்தியா வந்து அகதிகளாக இருக்கின்ற தமிழ் அகதிகள் அனைவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கிட வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் கோரினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் பூஜ்யம் நேரத்தில் டி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது: 1964ஆம் ஆண்டு லால்பகதூர் சாஸ்திரி – ஸ்ரீமாவோ பண்டாரநாயகா ஒப்பந்தத்தின்படி, இலங்கையில் வாழும் 5 லட்சத்து 25 ஆயிரம் இந்தியர்கள் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. 1981 வரையிலும் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றனர். அதன்பின்னர் இந்தியா வந்த இந்தியத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படவில்லை. அவர்கள் முகாம்களில் இருத்தி வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் முகாம்களில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது இந்த சாஸ்திரி – பண்டாரநாயகா ஒப்பந்தத்திற்கு விரோதமாகும். இப்போது அவர்கள் அகதிகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். இந்த ஒப்பந்தத்தின்கீழ் வந்து, அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கிற அனைத்து மக்கள் குறித்தும் அரசாங்கம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அகதிகளாக இருப்பவர்கள் 1983-84களில் வந்தவர்கள். இவர்களில் ஒரிஜினலாக வந்தவர்கள் பலர் இறந்துவிட்டார்கள். அவர்கள் குடும்பத்தினரும் குழந்தைகளும்தான் முகாம்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் எதிர்காலம் மிகவும் மங்கலாக இருக்கிறது. இவர்களின் நிலை குறித்து அரசாங்கம் மனிதாபிமானத்துடன் பரிசீலித்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவர்களின் சின்னஞ்சிறு குழந்தைகள் இந்தியாவில் பிறந்தவை. இவை கல்வியைத் தொடரமுடியவில்லை. நல்லதொரு எதிர்காலமின்றி உழன்றுகொண்டிருக்கிறார்கள். மாநில அரசாங்கம்தான் இந்த முகாம்களை நிர்வகித்து வருகிறது. இவர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டால், அரசாங்கத்தின் செலவினம் குறையும். அவர்களுக்கும் நல்லதொரு எதிர்காலம் கிடைத்திடும். இதனையும் அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு டி.கே.எஸ். இளங்கோவன் பேசினார்.
(ந.நி.)