பெங்களூரு
தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் தற்போது கொரோனா உச்சத்தில் பரவி வருகிறது. அதாவது தினசரி 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை மருத்துவமனைக்கு அனுப்பி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புதிய நோயாளிகளாக மருத்துவமனை சேர்ந்துள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில், கர்நாடக பாஜக அரசு பள்ளிகளை திறக்க திட்டமிட்டுள்ளது.
இதற்கு பல்வேறு கண்டணங்கள் எழுந்து வரும் நிலையில், முன்னாள் முதல்வர்களான சித்தராமையா (காங்கிரஸ்) மற்றும் குமாரசாமி (மதச்சார்பற்ற ஜனதாதளம்) ஆகியோர் பள்ளிகளை தற்போதைக்கு திறக்க வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட செய்தி குறிப்பில்,"மாநிலத்தில் இன்னும் கொரோனா பரவல் தணியாத சூழலில் பள்ளிகளைத் திறப்பது நல்லதல்ல. பெற்றோர்களும் பள்ளி திறப்பதற்கு எதிராகவே கருத்து தெரிவித்து வருவதால் திறக்க வேண்டாம். ஒருசிலரின் நிர்ப்பந்தத்திற்காக மாநில அரசு அடிபணியக்கூடாது. பள்ளிகளின் மூலம் கல்லாக்கட்டுவதற்காக மாணவர்களின் உயிரில் விளையாட நினைக்கிறார்கள். இதனால் பள்ளிகளை திறக்க வேண்டாம். குறிப்பாக மாநிலத்தில் இதுவரை 10 வயதுக்கு உட்பட்ட 20,256 மாணவர்களும், 11 முதல் 20 வயதுக்கு உட்பட்ட 47,061 மாணவர்க்ளும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் எச்சரிக்கையுடன் நினைவு படுத்தியுள்ளனர்.