tamilnadu

img

இந்திய மின் உற்பத்தியை டிரம்ப்பிடம் அடகு வைக்காதீர்! - எஸ்.எஸ்.சுப்பிரமணியன்

2020 பிப்ரவரி 24,25 தேதிகளில் அமெரிகக் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இந்தியா வில் வணிக ரீதியான பயணத்தை மேற்கொண்டார். அப்பயணத்தின் போது ரூ.21,000 கோடிக்கான ஒப்பந்தங் கள் கையொப்பம் ஆகின.  அதில் குறிப்பாக இந்திய அணுமின் கழகமும், அமெரிக்க வெஸ்டிங் அவுஸ் எலக்ட்ரிக் கம்பெனியும் இந்தி யாவில் ஆறு அணுமின் நிலையங்களை அமைக்க வணிக, தொழில்நுட்ப அம்சங்களை இறுதிப்படுத்த ஊக்குவிப்பது என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.  இந்தியாவில் அணு உலைகள் அமைப்பதன் மூலம் பயனடையக் கூடிய நிறுவனம் அமெரிக்க வெஸ்டிங் அவுஸ் எலக்ட்ரிக் நிறுவனமாகும். இந்திய அணுமின் நிறுவனத்தை பொறுத்தவரையில் இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி கூடுதலாகி உள்ள நிலையில், அமெரிக்க அணு உலைகளை இந்தியாவில் அமைப்போம் என்ற வாக்குறுதி க்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாத நிலையில் உள்ளது என்பதுதான் யதார்த்த நிலை.

ஆனால், 2020 ஆம் ஆண்டு நவம்பரில் ஜனாதிபதி தேர்தலை சந்திக்க உள்ள டிரம்ப், அமெரிக்க அணுசக்தி நிறு வனங்களான வெஸ்டிங் அவுஸ் உள்பட பல நிறுவனங்க ளுக்கு வெளிநாடுகளில் அணுமின் உலைகள் அமைப்பதற் கான வாய்ப்பை உண்டாக்கி தருவதாக அளித்த வாக்கு றுதியை நிறைவேற்றவே, 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தி யாவில் அமெரிக்க அணு உலைகளை அமைப்போம் என்ற பேச்சுவார்த்தையை நிறைவேற்ற வேண்டும் என வற்புறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதாவது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மறுமுறை தேர்தலை சந்திக்க இவர்களின் உதவி தேவைப்படுகிறது என்பது தெளிவாகத் தெரிகின்றது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் 1000 மெகாவாட் அலகு மின்சாரம் தயாரிக்கும் ஒரு அணுமின் நிலையம் ரூ.13.8 பில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ள தை பார்க்கும் போது இதே செலவில் இந்தியாவில் 6 அணு மின் உலைகள் அமைக்கப்பட்டால் (அதாவது 6 லட்சம் கோடி ரூபாய் செலவில்) அதன் கடுமையான விலை ஏற்ற சுமையை இந்திய மின்நுகர்வோர்கள், சாமானிய மக்கள் சுமக்க வேண்டிய ஆபத்து உள்ளது.

2013ஆம் ஆண்டு அமெரிக்க அணு உலைகளை அமைக்க கணக்கீடு செய்த போது- அதாவது அமெரிக்கா வில் ஒரு அணு உலை அமைக்க செய்யும் செலவில் 30 சத வீதம் குறைத்து திட்டமிட்டாலும், அமெரிக்க அணு உலையின் மூலம் தயாரிக்கும் ஒரு அலகு மின்சாரம் ரூ.25 ஆக இருக்கும். ஆனால் அதே சமயத்தில் இந்தியாவில் சூரிய ஒளி மூலம் தயாரிக்கும் மின்சாரம் ஒரு அலகு ரூ.3க்கு கிடைக்கின் றது. அது மேலும் எதிர்காலத்தில் குறைய வாய்ப்புள்ளது. இந்த சூழ்நிலையில்தான் அமெரிக்க ஜனாதிபதி ஒரு அலகு மின்சாரம் ரூ.25 செலவில் தயாரிக்கும் அணுமின் உலையை அமைக்குமாறு இப்போது வற்புறுத்துகிறார். அதை அமெரிக்காவிற்கு சலாம் போடும் மோடியும் ஏற்றுக் கொண்டு, கூட்டு அறிக்கையை வெளியிட்டு இந்திய உழைப் பாளி மக்களின் உதிரத்தைப் பன்னாட்டு கம்பெனிகளுக்கு உறிஞ்ச கம்பளம் விரித்துள்ளார்.

பெரும் ஆபத்து

மேலும், இந்தியாவில் அமைக்க உள்ள அணுமின் நிலையத்தில் விபத்து ஏதேனும் ஏற்பட்டால் அதனால் பாதிக் கப்படும் ஊழியர்களுக்கோ, மக்களுக்கோ, இழப்பீடு ஏதும் வழங்காமல் இருக்கும் வகையில் ஒப்பந்த ஷரத்துக்கள் அமைய வெஸ்டிங் அவுஸ் நிறுவனம் முயற்சிகள் மேற் கொண்டு வருகின்றன. போபாலில் விஷ வாயு கசி வினால் ஏற்பட்ட விபத்தால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்க ணக்கானவர்களுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்காடிய பின்னரும் கூட முறையான இழப்பீடு வழங்காத நிலை யையே அமெரிக்க நிறுவனம் எடுத்து வருவது ஒரு முன்னு தாரணமாகும். இந்திய அரசும், விபத்து ஏற்படின் அதற்குரிய இழப்பீடுகளை பெற்றுத் தருவதில் அக்கறை காட்டாததோடு பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பல்லக்குத் தூக்கும் நிலையை எடுத்து வருகிறது. தொழில்நுட்ப ரீதியாகப் பார்க்கும் போது மராட்டிய மாநிலம் தாராப்பூரில் இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டது. அந்த அணு உலைகள் தரமற்று இருந்ததால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்தியாவில் முதன்முதலில் அமைக்கப்பட்ட அணு உலை என்பதாலும், அதன் தொழில்நுட்ப தகுதியை அவ்வளவாகக் கணிக்க முடியாததனால் தரம் குறைந்த மின் உலையில் அடிக்கடி பழுதுகள் ஏற்பட்டு உற்பத்தியும் பாதிக்கப்பட்டது.

கூடங்குளத்தைப் பொறுத்த வரையில் இரண்டு அணு மின் உலைகள் கடந்த பத்தாண்டுகளில் இறக்குமதி செய்து நிறுவினோம். அம்மின் நிலையங்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டு உற்பத்தி பாதிக்கின்ற நிலையில்தான் உள்ளது. இந்த இரு அணு உலைகள் மூலமாக 2018-19 ஆம் ஆண்டுகளில் 32 சதவீதம், 38 சதவீதம் அளவே மின் உற்பத்தி செய்யப்பட் டுள்ளது. இந்திய அணுமின் உற்பத்தி வரலாற்றைப் பார்க்கும் போது அணுமின் உலைகள் அமைப்பதும், அதன் மூலம் மின்சார உற்பத்தி என்பதும் பெரும் பலன் அளிக்காத நிலை யிலேயே உள்ளதால் இந்திய மொத்த மின் உற்பத்தியில் அது வெறும் 3 சதவீதமாகவே உள்ளது. அதை உயர்த்த முடியவில்லை.

அணு உலைகள் இறக்குமதி என்பது கடந்த பல ஆண்டு களில் அனுபவங்களைப் பார்க்கும் போது அது விவேகமான செயலாக அமையவில்லை. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால் குஜராத் மாநிலம் மிரி விடுதி என்ற இடத்தில் 1000 மெகாவாட் அணு உலை அமைக்க திட்டமிடப்பட்டு கை விடப்பட்டது. ஏனெனில் உள்ளூர்வாசிகளின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக அணு உலை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது. 2018ஆம் ஆண்டுகளில் குஜராத் முதலமைச்சராக இருந்த விஜய் ரூபானி, குஜராத் மாநிலத்தில் இனி எப்போதும் அணுமின் உலைகள் அமைக்கப்பட மாட்டாது என்ற பொது அறிவிப்பினை செய்ததை எல்லாம் பாரதப் பிரதமர் கணக்கில் கொண்டு அணுமின் உலைகள் அமைப்பதை மிகவும் எச்சரிக்கையுடன் கைவிட வேண்டும்.

கட்டுரையாளர் : முன்னாள் தலைவர், 
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு)