tamilnadu

img

அமெரிக்காவின் அடாவடித்தனத்திற்கு அடிபணியாதே!

புதுதில்லி:
அமெரிக்க அரசின் அடாவடித்தனமான நடவடிக்கைகளுக்கு மத்திய மோடி அரசு அடிபணியக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே வர்த்தக உறவுகளில்  இருந்துவந்த முன்னுரிமை விதிமுறைகளுக்குத் தற்போது அமெரிக்க அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. இது தேவையற்றதும் விரும்பத்தகாததும் ஆகும்.அமெரிக்காவிற்கு சாதகமான வர்த்தக விதிமுறைகளை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக டிரம்ப் நிர்வாகம் இந்தியாவைக் கட்டாயப்படுத்தும் நட வடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. முன்னதாக, அமெரிக்கா, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப் படும் உருக்கு மற்றும் அலுமினியத்திற்கு இறக்குமதி வரியை அதிகரித்தது.

இவ்வாறான உத்தரவை அமெரிக்கா மார்ச் மாதத்திலேயே அறிவித்தபோதிலும், மோடி அரசாங்கம் இதனைத் தடுத்திட எவ்வித நடவடிக்கையும் எடுத்திடவில்லை.
அதேபோன்றே, ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்று அமெரிக்கா விதித்துள்ள கட்டளையின்மீதும் மோடி அரசாங்கம் சரணாகதி அணுகு முறையையே பின்பற்றுகிறது.   இது, நரேந்திர மோடியும், பாஜகவும் அடிக்கடித் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் “தேசியவாதத்தைக்” கேலிக்கூத்தாக்கி இருக்கிறது.இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.    (ந.நி.)