மோடி அரசாங்கம், ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலிருந்து, வலதுசாரி சாய்மானம் உள்ளவர்கள் எனக்கருதப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களை காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு வரவழைத்திட முடிவு செய்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துக் கொள்கிறது.
இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
காஷ்மீர் பள்ளத்தாக்கிற்குள் செல்வதற்கான சுதந்திரத்தை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் மறுத்திருக்கக்கூடிய அதே சமயத்தில் அந்நிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலரை அனுமதிக்க இருக்கும் செயலானது இந்திய நாடாளுமன்றத்தையும் அதன் இறையாண்மையையும் அவமரியாதை செய்வதாகும். இது ‘தனிப்பட்ட பயணம்’ (private visit) எனக் கூறப்பட்டபோதிலும், பிரதமர் அவர்களைச் சந்தித்திருக்கிறார். தேசியப் பாதுகாப்பு ஆலோசகரும் அவர்களுடன் உரையாடி இருக்கிறார்.
நம் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அம்மாநில மக்களுக்கு நன்கு அறிமுகமான தேசிய அளவிலான அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் காஷ்மீர் செல்வதற்கு அனுமதியை மறுத்திருப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களை இன்னமும் சிறையிலும் மற்றும் காவலடைப்பிலும் தொடர்ந்து வைத்திருக்கக்கூடிய அதே சமயத்தில், அந்நிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு சிலருக்கு மட்டும் காஷ்மீருக்கு விஜயம் செய்வதற்கு, சிறப்புச் சலுகைகளை அளித்திட முடியாது.
காஷ்மீரில் பெரும் பகுதி இன்னமும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பாது ஆட்சியாளர்களால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நிலைமை தொடர்கிறது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பத்தாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக வர்த்தக நிறுவனங்கள் சமீபத்தில் தெரிவித்திருக்கின்றன. இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் அங்கே விஜயம் செய்வதற்கு இப்போதும் அனுமதி மறுக்கப்படுகிறது. இந்நிலையில் வெளிநாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை அங்கே அனுப்புவதால் அரசுத்தரப்பில் கூறப்படுவதுபோல் இயல்வு நிலை திரும்பிடும் என்பதற்கு வாய்ப்பே கிடையாது. இதற்கு அடிப்படை ஆதாரம் எதுவும் கிடையாது.
காஷ்மீரில் பயணம் செய்வதற்கும், இயங்குவதற்கும் கொண்டுவரப்பட்டுள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு உறுதிபடக் கோருகிறது. மேலும் அனைத்து ஒடுக்குமுறை நடவடிக்கைகளையும் நிறுத்திக் கொள்ள, அரசாங்கம் அவசர நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்றும், மக்களின் ஜனநாயக உரிமைகளை மீண்டும் வழங்கிட வேண்டும் என்றும் அரசியல் தலைமைக்குழு கோருகிறது.
இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.
(ந.நி.)