சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கும் நிலையில், மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வு கிரிமினல் நடவடிக்கையாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாகச் சரிந்துள்ள நிலையில், நரேந்திர மோடி அரசாங்கம், வழக்கமாகச் செய்வதுபோன்று, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் கலால் வரியை அதிகரித்திருப்பது விந்தையாக இருக்கிறது. இது, ஏற்கனவே பொருளாதார மந்தத்தால் அவதிக்குள்ளாகி இருக்கிற மக்கள்மீதான கொடூரமான கிரிமினல் தாக்குதலாகும்.
பெட்ரோல் மீதான சிறப்பு கலால் வரி, லிட்டருக்கு 2 ரூபாயிலிருந்து, 8 ரூபாயாகவும், டீசலுக்கு லிட்டருக்கு 4 ரூபாயும் உயர்த்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும் கலால் வரி ரூ. 22.98 ஆகும், டீசலுக்கு ரூ. 18.83 ஆகும். அதேபோன்று, பெட்ரோல் மீதான ரோடு செஸ் வரி (Road Cess) லிட்டருக்கு 1 ருபாயும், டீசலுக்கு 10 ரூபாயும் உயர்த்தப்பட்டிருக்கிறது.
நிர்வாக ரீதியிலான விலை நிர்ணயிக்கும் முறை கைவிடப்பட்ட சமயத்தில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைகள் குறையும்போது அதன் பயன்கள் நுகர்வோருக்குத் திருப்பப்படும் என்று நாட்டு மக்களுக்குச் சொல்லப்பட்டது. மாறாக, பாஜக 2014இல் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, பெட்ரோல் மீதான வரி 142 சதவீதமும், டீசல் மீதான வரி 429 சதவீதமும் உயர்த்தப்பட்டிருக்கிறது.
பொருளாதார மந்தமும், கொரானா வைரஸ் உருவாக்கியுள்ள பெரிய அளவிலான சுகாதார எச்சரிக்கைத் தன்மையும் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ள கடும் சூழ்நிலையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள குறைவினை, ஏற்கனவே பொருளாதார சுமையால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நுகர்வோருக்குச் சென்றடையும் விதத்தில் அரசு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ஆயினும், கூட்டுக்களவாணி கார்ப்பரேட்டுகளின் நலன்கள் பற்றி அதிகமாகக் கவலைப்படுகின்ற, சாமானிய மக்கள் குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப்படாத இந்த அரசாங்கத்திடமிருந்து இதுபோன்ற நடவடிக்கையை எதிர்பார்க்க முடியாதுதான்.
பெட்ரோல், டீசல் விலையை கிரிமினல்தனமாக உயர்த்திஇருப்பதை விலக்கிக் கொள்ளவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கோருகிறது. அத்துடன் சர்வதேச அளவில் விலைகள் வீழ்ச்சியடைந்ததற்கு ஒப்பாக, சில்லரை விலைகளையும், அதாவது 30 சதவீத அளவிற்கு, குறைத்திட வேண்டும் என்றும் அரசியல் தலைமைக்குழு கோருகிறது.
இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.
(ந.நி.)