திருவனந்தபுரம்:
கேரளத்தில் புதனன்று ஒரேநாளில் 10,606பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிக பட்சமாக கோழிக்கோடு மாவட்டத்தில் 1576 பேருக்கும், மலப்புரம் 1350,எர்ணாகுளம் 1201, திருவனந்தபுரம் 1182 என நான்கு மாவட்டங்களில் மட்டும் 5000 பேருக்கு மேல் கோவிட் பாதிப்புக்கு உள்ளாகினர். புதனன்று 22 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 906 ஆக அதிகரித்துள்ளது.
புதனன்று இந்த நோய் கண்டறியப்பட்டவர்களில் 55 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 164 பேர் பிற மாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள். தொடர்பு மூலம் 9542 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 741 க்கான தொடர்புஆதாரம் தெளிவாக இல்லை. 98 சுகாதார ஊழியர்கள் தொடர்பு மூலம் பாதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்தவர்களில் 6161 பேர் குணமடைந்தனர். இதுவரை 1,60,253பேர் கோவிட்டிலிருந்து குணடைந்துள்ளனர். 92,161 பேருக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டு இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரளத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது 2,67,834 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 2,38,331 பேர் வீட்டு / நிறுவன தனிமைப்படுத்தலின் கீழும், 29,503பேர் மருத்துவமனை கண்காணிப்பிலும் உள்ளனர். புதனன்று 2922 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் 73,816 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. வழக்கமான மாதிரிகள், விமான நிலைய கண்காணிப்பு உட்பட மொத்தம் 33,40,242 மாதிரிகள் இதுவரை சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. சென்டினல் கண்காணிப்பின் ஒரு பகுதியாக, சுகாதார ஊழியர்கள், வெளி மாநில தொழிலாளர்கள் மற்றும் அதிக சமூக தொடர்பு உள்ளவர்கள் போன்ற முன்னுரிமை குழுக்களிடமிருந்து 2,10,648 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன. புதனன்று 14 புதிய ஹாட்ஸ்பாட்கள் உருவாகின. 12 பகுதிகள்ஹாட்ஸ்பாட்டில் இருந்து விலக்கப்பட்டுள்ளன. தற்போது மாநிலம் முழுவதும் மொத்தம் 720 ஹாட்ஸ்பாட்கள் உள்ளன.