tamilnadu

img

நுகர்வோர் விலைவாசிக் குறியீட்டெண் மாற்றத்திற்கு சிஐடியு, ஏஐடியுசி, மத்திய தொழிற்சங்கங்கள் கண்டனம்

புதுதில்லி:
நுகர்வோர் விலைவாசிக் குறியீட்டெண்ணிற்ற்கான அடிப்படை ஆண்டை 2016க்கு மாற்றியிருப்பதற்கு, சிஐடியு-ஏஐடியுசி உட்பட மத்தியத்தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தைப் பூசிமெழுகிடுவதற்காகவும், அதன்மூலம் தொழிலாளர்களின் நியாயமான நிலுவைத்தொகைகளைப் பறித்திடுவதற்காகவுமே இவ்வாறு மாற்றப்பட்டிருக்கிறது என்று அவை தெரிவித்துள்ளன.இது தொடர்பாக அவை வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

நுகர்வோர் விலைவாசிக் குடியீட்டெண்ணிற்கான அடிப்படை ஆண்டை 2001இலிருந்து 2016க்கு மாற்றியிருப்பதற்கு, மத்தியத் தொழிற்சங்கங்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திக்கொள்கிறது. மத்தியத் தொழிற்சங்கங்கள் இதுதொடர்பாக 2020 ஆகஸ்ட் அன்று அனுப்பியகடிதத்தில் எழுப்பியிருந்த அனைத்து பிரச்சனைகளையும் மற்றும் பரிந்துரைகளையும் அரக்கத்தனமான முறையில் ஒதுக்கித்தள்ளியிருக்கிறது.  மத்திய அரசின் கீழ் இயங்கும் லேபர் பீரோவின் இந்த நடவடிக்கை முற்றிலும் தான்தோன்றித்தனமானதும், வேண்டுமென்றே அத்தியாவசியப்பொருள்களின்  விலைவாசி உயர்வின் உண்மையான தாக்கத்தை நசுக்கிடும் செயலுமாகும். இதன் விளைவாக தொழிலாளர்களுக்கும், அரசுஊழியர்களுக்கும் வரவேண்டிய அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுவது மறுக்கப்படுகிறது.லேபர் பீரோவானது, பொருளாதார மந்தத்தின் காரணமாக, அத்தியாவசியப் பொருள்களின் விலைகள், குறிப்பாக உணவுப்பொருள்களின் விலைகள் உயர்ந்திருப்பது குறித்து கவலைப்படாமல் அவை குறைந்துள்ளதாக, அதாவது அவற்றின் நுகர்வு 46.2 சதவீதத்திலிருந்து 39 சதவீதமாகக் குறைந்திருப்பதாகத் தான்தோன்றித்தனமாகக் கூறத் தயங்கிடவில்லை. இவ்வாறு தொழிலாளர்களால் பொருள்கள் வாங்க முடியாத நிலைமையைக் கேலிசெய்யும் விதத்தில், தொழிலாளர்களின் சராசரி நுகர்வு செலவினம் குறைந்திருப்பதாக அமைச்சரின் அறிக்கை அதனை நியாயப்படுத்திஇருக்கிறது. உலகப் பட்டினி அட்டவணையில், இந்தியா மொத்தம் உள்ள நாடுகளில் மிகவும்கீழே 94ஆவது நாடாக வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அதுவும் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானுக்கும் கீழே இந்தியா சென்றுள்ள நிலையில், இந்த அரசு இவ்வாறு தொழிலாளர்களை ஏமாற்றும்விதத்தில் நடந்துகொண்டிருக்கிறது.  

மத்திய அரசின் தில்லுமுல்லு வேலைகள்இத்துடன் முடிந்துவிடவில்லை. உண்மையான விலைவாசி உயர்வின் தாக்கத்தை நசுக்குவதற்காகவும் இவ்வாறு அடிப்படை ஆண்டை 2001இலிருந்து 2016க்கு மாற்றியிருக்கிறது. இதற்குமுன் இரு தடவைகள் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களும், உயர்வான நிலையில் அட்டவணைக் காரணிகளைக் காட்டின. அதாவது 1960இலிருந்து 1982க்கு மாற்றப்பட்டபோது 4.93 என்றும், 1982இலிருந்து 2001க்கு மாற்றப்பட்டபோது4.63 என்றும் காட்டின. ஆனால் இப்போது 2001இலிருந்து 2016-க்கு மாற்றப்படும்போது வெறும் 2.88 என்று காட்டுகிறது. இவ்வாறு மோசடிமேலும் மேலும் சென்றுகொண்டிருக்கிறது.மேலும் 2016ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகத் தீர்மானித்திருப்பதிலும் தில்லுமுல்லு செய்யப்பட்டிருக்கிறது. ஒரிஜினலாக இதனை 2020 ஜூலை என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மோடி அரசாங்கம் ஆட்சிக்குவந்த பின்னர், இவ்வாறு 2016 என்று பின்னால் சிந்தித்துத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்புகள், 2016க்குப்பின்னர் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக நிலைகுலைந்திருப்பதை மூடி மறைத்திடவும் இவ்வாறு மாற்றப்பட்டது.

பொருளாதார மந்தத்தின் விளைவாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து நிவாரணம் பெற அகவிலைப்படியை அளித்திட வேண்டும் என்று ஊழியர் சங்கங்கள் கோரி வருகின்றன. இப்போது இவர்களின் முதலாளிகளும் இக்கோரிக்கையை கொல்லைப்புற வழியாகக் கோருவதால் அதற்கு அரசாங்கம் செவிமடுத்திருக்கிறது.மத்திய பாஜக அரசாங்கத்தின் கார்ப்பரேட் ஆதரவு, தொழிலாளர் விரோத நடவடிக்கையை மத்தியத் தொழிற்சங்கங்கள் கண்டிக்கின்றன. அரசின் நயவஞ்சகமான இந்த முடிவை தொழிலாளர்களும் ஊழியர்களும் எதிர்த்திட முன்வரவேண்டும் என்று அறைகூவி அழைக்கின்றன.அரசின் கார்ப்பரேட் நலன் காணும் இந்நடவடிக்கைக்குச் சரியாகப் பதில் கூறும் விதத்தில்  நவம்பர் 26 வேலைநிறுத்தத்தை மாபெரும் அளவில் வெற்றிபெறச்செய்திடுவோம். இவ்வாறு மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன. (ந.நி.)