tamilnadu

img

சாதி மறுப்பு திருமண தம்பதியினருக்கு ஊக்கத்தொகை: வருடத்திற்கு 500 இலக்கு மட்டுமே- அமைச்சர் அதிர்ச்சித்தகவல்

சாதி மறுப்பு திருமணங்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் ஊக்கத் தொகைகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுத்து மூலம் பல கேள்விகளை எழுப்பினார்.
சமூக ஒருமைபாட்டிற்கான டாக்டர் அம்பேத்கர் திட்டத்தின் மூலம் சாதி மறுப்பு திருமணம் செய்துக் கொள்ளும் ஒவ்வொரு மணமக்களுக்கும் வழங்கப்படும் ஊக்கத் தொகை எவ்வளவு? 2015-16 நிதியாண்டு முதல் 2018-19 நிதியாண்டு வரையிலான நான்கு ஆண்டுகளில் சாதி மறுப்பு திருமணம் செய்துக் கொண்ட தம்பதிகளில் எத்தனை பேர் ஊக்கத் தொகை வேண்டி விண்ணப்பம் அளித்து இருந்தனர்? மேற் சொன்ன காலக்கட்டத்தில்  ஊக்கத் தொகை எத்தனை தம்பதிகளுக்கு வழங்கப்பட்டது?ஒரு நிதியாண்டில் 500 சாதி மறுப்பு தம்பதிகளுக்கு  வழங்கப்படும் அளவிற்கான ஊக்கத்தொகை கிடைத்ததா? இத்திட்டத்தில் வழங்கப்படும் ஊக்கத்தொகையினையும் பயனாளிகளின் எண்ணிக்கையினையும் அதிகரிக்கும் திட்டம் ஏதும் உள்ளதா? என்றும் கேள்விகள் எழுப்பியிருந்தார்.
இந்த கேள்விகளுக்கு பதில் அளித்த சமூக நலத் துறையின் இணை அமைச்சர் ரத்தன் லால் கடாரியா அவர்கள் பின்வருமாறு பதிலளித்துள்ளார்.
சமூக ஒருமைபாட்டிற்கான டாக்டர் அம்பேத்கர் திட்டத்தின் மூலம் சாதி மறுப்பு திருமணம் செய்துக் கொள்ளும் ஒவ்வொரு மணமக்களுக்கும் வழங்கப்படும் ஊக்கத் தொகை ரூ. 2.5 லட்சமாகும். 
2015-16 ம் ஆண்டு 544 சாதி மறுப்பு தம்பதியினர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 54 பேருக்கு மட்டும் ஊக்கத்தொகை அளிக்கப்பட்டது. இதே போல் 2016-17, 2017-18, 2018-19 ஆகிய ஆண்டுகளில் முறையே 711 விண்ணப்பங்களில் 67 தம்பதியினருக்கும், 582 விண்ணப்பங்களில் 136 தம்பதியினருக்கும், 493 விண்ணப்பங்களில் 120 தம்பதியினருக்கு மட்டுமே வழங்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு வருடத்திற்கு 500 எனும் இலக்கு என்பது 2013-14, 2014 -15 ஆகிய இரு ஆண்டுகளுக்கு பரிசோதனை அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு மட்டுமே. 2015 ம் ஆண்டையும் தாண்டியும் இத்திட்டத்தை தொடர வேண்டும் என டாக்டர் அம்பேத்கர் மையம் முடிவெடுத்தது. வருடத்திற்கு 500 எனும் இலக்கு அடையாளபூர்வமானது மட்டுமே என்றும் இலக்கை முழுமையாக நிறைவேற்ற வேண்டிய கட்டாயமில்லை என்றும் அமைச்சர் தான் அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளார். ஊக்கத் தொகையினை அதிகரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அப்பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.