புதுதில்லியில், தில்லிப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து மகளிர் கார்கி கல்லூரியில் பிப்ரவரி 6ஆம் தேதி அன்று கல்லூரி விழா நடைபெற்றபோது, அதற்குள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரிக்கும் காவி கயவர்கள் குடிபோதையுடன் புகுந்து பெண்களை மானபங்கப்படுத்தியுள்ளனர். இதனைக் கண்டித்து இன்று (திங்கள்கிழமை) நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
கார்கி மகளிர் கல்லூரியில் பிப்ரவரி 6ஆம் தேதியன்று மாலை 6.30 மணியளவில் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. அப்போது குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவான காவி கயவர் கும்பல் ஒன்று குடிபோதையுடன் கல்லூரிக்குள் புகுந்து பெண்களை மானபங்கப்படுத்தியிருக்கிறது. அவர்கள் பெண்களை உரசிக்கொண்டும், மானபங்கப்படுத்தும் விதத்திலும் நடந்துகொண்டிருக்கின்றனர். சில மாணவிகளைத் தாக்கியும் உள்ளனர். கல்லூரியின் வாயில் அருகே காவல்துறையினரும், அதிரடிப்படையினரும் இருந்தும்கூட இந்த அக்கிரமங்களைத் தடுத்திட அவர்கள் எதுவும் செய்திடவில்லை. இதனைக் கண்டித்து மாணவர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். சம்பவம் குறித்து மாணவர்களும், ஆசிரியர்களும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்
கார்கி கல்லூரியில் காவி குண்டர்கள் மேற்கொண்ட காலித்தனத்திற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோரியுள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: பிப்ரவரி 6 அன்று கார்கி கல்லூரிக்குள் புகுந்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவான குழுவினர், பெண்களைத் துன்புறுத்தியிருப்பதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அதிர்ச்சியையும் கடும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறது. கார்கி கல்லூரியில் கல்லூரி விழா நடைபெற்றசமயத்தில் இது நடந்திருக்கிறது. குடியுரிமைத் திருத்தச்சட்ட ஆதரவாளர்கள் வளாகத்தினுள் சுவர் ஏறிக்குதித்து நுழைந்திருக்கிறார்கள். அவர்கள் குடிபோதையில் இருந்ததுடன் ஜெய் ஸ்ரீராம் கோஷங்களையும் எழுப்பியிருக்கிறார்கள். பின்னர் அவர்கள் பெண்களை மானபங்கப்படுத்தி இருக்கிறார்கள். பாதிப்புக்கு உள்ளான பெண்கள் அளித்திட்ட புகார்களைக் கல்லூரி நிர்வாகம் கண்டு கொள்ளாதது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. காவல்துறையினர் இந்தச் சம்பவங்கள் குறித்து தாமாகவே முன்வந்து நடவடிக்கைஎடுத்து, கயவர்களைக் கைது செய்து கிரிமினல் வழக்குத் தொடுத்திட வேண்டும். பல்கலைக் கழகமும், கூருணர்வற்ற முறையிலும், பொறுப்பற்ற முறையிலும் நடந்துகொண்டுள்ள கல்லூரி நிர்வாகத்தினர் மீது உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். கார்கி கல்லூரி மாணவிகளுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தன் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொள்கிறது. இதில் நீதி கிடைக்கும்வரை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தங்களுக்குத் துணை நிற்கும். கல்லூரி வளாகங்களிலும், பல்கலைக் கழகங்களிலும் காவி கயவர்களின் அதிகரித்துவரும் குண்டாயிசத்திற்கு எதிராக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அனைத்துக் கிளைகளும், இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபடும். இவ்வாறு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறிக்கையில் கூறியுள்ளது.
(ந.நி.)