...நேற்றைய தொடர்ச்சி
“என்னுடைய வாலிபத்தில் பகத்சிங்கை எனக்கு பகத்சிங் என்று தெரியாது; ஆனால் அஜய் கோஷின் நண்பர் என்று தான் தெரியும். அஜய் கோஷ் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர் என்பதால் நான் எவ்வித கேள்வியையும் கேட்கவில்லை. அஜய் கோஷ் இந்து ஹாஸ்டலில் இருந்தார். நான் அலகாபாத் பல்கலைக்கழக ஹாலந்து அரங்கில் இருந்தேன். 1928 வாக்கில் நான் பல்கலைக்கழகத்தின் அரசியல் சிந்தனை கொண்ட மாணவர்களிடையே ஒரு கம்யூனிஸ்ட் என்று பிரபலமாயிருந்தேன். ஒருநாள் அஜய் கோஷ் அவருடைய நண்பரை அழைத்து வந்தார். நான் அவருக்கு மார்க்சிய- லெனினிய நூல்களையும், கம்யூனிஸ்ட் அகிலத்திலிருந்து கடைசியாக வந்துள்ள நூல்களையும், இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் ஏடுகளையும் அளிக்க வேண்டுமென கூறினார். இவற்றை நான் அயல்நாட்டிலிருந்து என்னுடைய ரகசிய விலாசத்தில் பெற்று வந்தேன். இவ்வாறு தான் அது தொடங்கியது. அஜயின் நண்பர் அலகாபாத்திலிருக்கும் பொழுது வருவார். ஒரு குழந்தையின் வெகுளித்தனத்துடன், இனிய புன்னகை மிளிர இயல்பான தன்மையுடன் மிகவும் வசீகரமான நபராக அவர் காணப்படுவார்.
“தேவையான புத்தகங்களை அவர் எடுத்துக் கொள்வார். அதன்பின் நாங்கள் பல்கலைக்கழக வளாகத்தின் பரந்த பசுமையான தோட்டப் பகுதியில் நடப்போம். எங்களுடைய விவாதங்கள் நீடிக்கும்வரை அல்லது அது ஒரு முடிவுக்கு வரும் வரை அல்லது இரவு உணவுக்கு வெகு நேரமாகிவிட்டது என்றால் திரும்பி வருவோம். நான் அவரை இந்து ஹாஸ்டல் வாயிலில் விட்டுவிட்டு எனது இடத்திற்குத் திரும்பி வருவேன்.
“அது நடந்தது 1928ல். இப்பொழுது 1969; 41 நீண்ட ஆண்டுகள் கடந்துவிட்டன. மிகவும் மனம் திறந்த அல்லது அறிவைத் தேடுவதில் மிகவும் நாட்டம் கொண்ட இத்தகைய ஒரு அரசியல் ஊழியரையோ அல்லது தலைவரையோ என் வாழ்நாளில் இதுவரை கண்டதில்லை. என் சொந்த அனுபவத்தில் ஜவஹர்லால் நேருவை இரண்டாவது இடத்தில்தான் வைப்பேன். இவ்வாறு தான் பகத்சிங் என் நினைவில் நிற்கிறார்.
“இந்தியாவின் எதிர்காலமானது இடதுசாரிகளையும், அவர்களின் விவேகத்தையும் பலத்தையும் சார்ந்துள்ளது என்பது தெளிவு. இவ்வாரத்தில் பகத்சிங் தினத்தில் இரங்கல் உரைகளை நிகழ்த்துவது போதுமானதல்ல; ஆனால் இடதுசாரி பேச்சாளர்கள் தங்களைத்தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய அவசியமுள்ளது. நமக்குப் பொதுவான மற்றும் சிறந்ததான பகத்சிங்கினுடைய பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல அறிவையும் தன்னலமற்ற துணிவையும் போதுமான அளவு பெற்றுள்ளோமா? பகத்சிங், நமது தேசிய அட்டவணையில் அழியாத் தன்மையை எவ்வாறு பெற்றாரென்றால் தனக்கு அதிகம் தெரியாது என்று அவர் உணர்ந்ததாலும், தனக்காகப் படிக்கவும் மற்றும் இதரர்களிடமிருந்து மேலும் கற்றுக் கொள்ளவும் அவர் ஒருபோதும் சளைத்ததில்லை. இதரர்கள் எனும்போது அவரும், அவருடைய கட்சியினரும் கருத்து மாறுபாடு கொண்டவர்கள் ஆவர்; அவர்களில்லாமல் பொதுவான லட்சியத்தை அடையமுடியாது என்று அவர் உணர்ந்திருந்தார். அது அவருடைய துணிவிற்கு நம்பிக்கை சேர்த்தது என்பதுடன் அவர் நாட்டின் தியாக கதாநாயகன் ஆவார். இந்திய இடதுசாரிகள் அவர்களாகவே உயர்ந்து நிற்க அந்த உணர்வும், கண்ணோட்டமும் இன்று நமக்கு மிகவும் தேவைப்படுகிறது.”
பகத்சிங் தூக்கிலிடப்படும் தருவாயிலோ அல்லது தூக்கிலிடப்பட்டவுடனேயோ எழுதப்பட்ட கவிதைக் கொத்து கீழே தரப்பட்டுள்ளது. இவர்களில் எந்தவொரு எழுத்தாளரும், “அங்கீகரிக்கப்பட்ட” கவிஞர்கள் வரிசையில் உள்ளவர் அல்ல! எழுதப்பட்ட கவிதைகள், சாதாரண மக்களாகிய வாசகர்களுக்கு நடப்பு செய்தித்தாள்கள் மற்றும் சஞ்சிகைகள் வழியாக சென்றடையும் விதத்தில் எழுதப்பட்ட கவிதைகளாகும். அவை எளிமையாக எழுதப்பட்டுள்ளன. தானாகவே உணர்வுப் பூர்வமாகக் கிளர்ந்தெழுந்தவை; அவை, (நான் மேம்படுத்தும் அளவுக்கு சிறப்பாகயிருந்தவை) ரகசியப் புலனாய்வு அதிகாரிகளால் செய்யப்பட்ட மொழியாக்கங்களிலும் கூட காலத்தின் உணர்வை தெரிவிப்பவை. நான் பகத்சிங்கின் தாய்மொழியான பஞ்சாபியிலிருந்து துவங்குகிறேன். விர்லப் என்ற தலைப்பைக் கொண்ட கர்முகி பிரசுரத்திலிருந்து ஒரு பாடலைத் தருகிறேன்.
இந்தியத் தாய்க்கும் பகத்சிங்கிற்குமிடையிலான உரையாடல்
இந்தியத்தாய்
ஓ,மக்களே!
உலகம் முழுவதும் உள்ள மக்களே!
என் ‘நிலவு’ மறைந்ததும்
இருள் சூழ்கிறது!
பகத்சிங்
ஓ, தாயே!
இந் ‘நிலவு’ உங்களுடையது
முழு உலகை ஒளிரச் செய்யும்
மழைக்கால ஊஞ்சலில் மக்கள் ஆடுவதைப் போல்
தூக்கு மேடையில் நாங்கள் ஆடுவோம்
இந்தியத்தாய்
ஓ, மகனே! உன் தியாகம்
என் பிணைப்புகளை துண்டாக்கிவிட்டது
பகத்சிங்
ஓ, தாயே! நான் அமைதியாக துயில்கிறேன்
இப்பொழுது என்னை எழுப்ப வேண்டாம்
இந்தியத்தாய்
ஓ, மகனே! உன்னைத்தூக்கிலிட்டது
இந்திய விலங்குகளை உடைக்கும்
பகத்சிங்
இந்திய நாட்டின் விடுதலைக்காக
மீண்டும் நான் பிறப்பேன் தாயே!
இந்தியத்தாய்
ஓ, மக்களே, சிங்கத்தை வளர்த்தெடுத்தேன்
இர்வின் கூண்டிலடைத்தான்
பகத்சிங்
ஓ, தாயே, உன் சிங்கம் உறுமினால்
இங்கிலாந்தே அதிரும்
ஒரு சிங்கம் மடியட்டும் - அதனிடத்தில்
லட்சம் சிங்கங்கள் தோன்றட்டும்.
(குறிப்பு : தோழர் பி.சி.ஜோஷி அவர்கள் 1936ஆம் ஆண்டிலிருந்து 1947ஆம் ஆண்டு வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக செயல்பட்டார். தோழர் அஜய் குமார் கோஷ் அவர்கள் 1951ஆம் ஆண்டிலிருந்து 1962ஆம் ஆண்டு வரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக செயல்பட்டார்)
ஆதாரம் : பி.சி.ஜோஷியின் அரிய கட்டுரைகள் தொகுப்பு,
தமிழாக்கம் : என்.ஆர்.