புதுதில்லி, டிச. 16- உன்னாவ் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில், பாஜக எம்எல்ஏ குல்தீப்சிங் செங்கார் குற்றவாளி என தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை, பங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் கடந்த 2017-ம் ஆண்டில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பெரும் போராட்டம் எழுந்து, குல்தீப் சிங் செங்காரை கட்சியிலிருந்து பாஜக நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
லக்னோ நீதிமன்றத்தில் பாலியல் வன்முறை வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பாதிக்கப்பட்ட இளம்பெண், தனது தாயார், உறவினர்கள் மற்றும் வழக்கறிஞருடன் காரில் சென்றபோது லாரியால் மோதப்பட்டு, அவரது உறவுக்கார பெண் மற்றும் வழக்கறிஞர் கொல்லப்பட்டனர். இளம்பெண்ணும் அவரது தாயாரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று உடல்நலம் தேறினர். இந்த ‘விபத்து’ பாதிக்கப்பட்ட இளம்பெண்ண கொல்வதற்கு நடந்த சதி என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, குல்தீப் சிங் செங்கார், அவரது சகோதரர் மற்றும் 9 பேர் மீது தனியாக கொலை உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த இளம்பெண் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில், பாலியல் வன்முறை உள்ளிட்ட 5 வழக்குகளையும் லக்னோ நீதிமன்றத்தில் இருந்து தில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் மாற்றியது.
தில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அன்றாடம் விசாரணை நடத்தி 45 நாட்களுக்குள் வழக்கை முடிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து தில்லி நீதிமன்றம் திங்களன்று தீர்ப்பளித்துள்ளது. சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். வரும் 19ஆம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளன. பாலியல் வன்கொடுமை வழக்கு தவிர இதர 4 வழக்குகளின் விசாரணை இன்னும் முடிவடையவில்லை.