பாட்னா:
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி என்பது உண்மையில் ஜனநாயகமான கூட்டணி அல்ல; மாறாக அது தேசிய ‘அழிப்புக்’ கூட்டணி (NDA- National Destructive Alliance) என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் சாடினார்.
பீகாரில் முதல்கட்ட சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் ஆர்ஜேடி தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள இடதுசாரிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து இடதுசாரி தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். இந்தவாரத் துவக்கத்தில் விபூதிப்பூர் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் இடதுசாரி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் பிரச்சாரம் மேற்கொண்டார். பல்லாயிரக்கணக்கான மக்கள் இப்பிரச்சாரங்களில் பங்கேற்றனர்.
இக்கூட்டங்களில் பங்கேற்ற பிருந்தா காரத் பேசியதாவது:
பாஜக தலைமையிலான ‘தேசிய அழிப்புக் கூட்டணியின்’ மக்கள் விரோத நடவடிக்கைகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் பீகாரிலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு வேலைக்குச் சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள். மீண்டும் ஊர்திரும்பியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் இந்த முறை பாஜக மற்றும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள கூட்டணிக்கு பாடம்புகட்ட காத்திருக்கிறார்கள். அவர்கள் அளிக்கும் வாக்கு களால் இடதுசாரிகள் இணைந்துள்ள ஆர்ஜேடி தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றிபெறுவது உறுதி.
பீகார் மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணியை வீழ்த்துவது என்ற பீகார் மக்களின் மனநிலை மிகத்தெளிவாக வெளிப்பட்டு வருகிறது. பாஜக தzமையிலான கூட்டணி, நாடு முழுவதும்உள்ள மக்கள் கண்ணியமாக வாழ் வதற்கும், வாழ்வாதாரங்களை சம்பாதித்துக்கொள்வதற்கும், வழிசெய்யவில்லை; மாறாக ஏழை-எளிய மக்கள் முன்பு உள்ள வாழ்வாதார வழிகள் அனைத்தையும் அழித்துவிட்ட கூட்டணி ஆகும். கொரோனா பரவலை தடுப்பதற்கு திட்டமிடாமல், எவ்வித முன்யோசனையும் இல்லாத ஊரடங்கு அறிவிப்பினால் பீகாரைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள்நாட்டின் பல்வேறு நகரங்களில் வேலையில்லாமலும், வீடில்லாமலும், உணவில்லாமலும் பல நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மைல்கள் தூரம் தங்கள் குடும்பத்தினருடன், குழந்தைகளுடன் நடந்தே சென்ற துயரம் இந்தியாவின் மிகப்பெரிய துயரநிகழ்வுகளில் ஒன்றாகும். இந்தப் பிரச்சனையை இடதுசாரிகளும் எதிர்க்கட்சிகளும் மீண்டும் மீண்டும்அரசுக்கு சுட்டிக்காட்டினோம். ஆனால்மோடி அரசு காதுகளை மூடிக்கொண்டது. நிதிஷ்குமார் அரசும் அலட்சியத்தின் உச்சத்தில் நின்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் திரும்பி வருகிறார்கள் என்ற நிலையில், அவர்களுக்கு சொந்த மண்ணில் வேலை தருவதாக வாக்குறுதி அளித்து முட்டாளாக்க முயற்சித்தது. ஆனால் சொந்த மண்ணுக்குத் திரும்பிய பிறகும் வேலையில்லை. வேறு வழியில்லாமல் பீகார் ஏழைகள் மீண்டும் வேலைதேடி, உணவு தேடி வீட்டை விட்டு வெளியே செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.பாஜகவும் நிதிஷ்குமார் அரசும், பீகார் மக்களுக்குச் செய்த துரோகத்திற்கு பதிலடி கொடுக்கும் தருணம் இது.
இவ்வாறு அவர் பேசினார்.பிருந்தா காரத் மேற்கொண்ட பிரச்சார நிகழ்வுகளைத் தொடர்ந்து, வியாழனன்று பீகாரின் பல்வேறு தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்து.ராஜா, சிபிஐ(எம்எல்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கவிதா கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் பீகார் மாநிலச் செயலாளர் அவதேஷ் குமார் உள்ளிட்ட தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரத்தைத் துவக்கியுள்ளனர்.