நான் இரண்டாவது மொழியாகத்தான் இந்தியை கற்கவேண்டும் என்று கூறியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அந்தர் பல்டி அடித்துள்ளார்.
இந்திய அரசியல் நிர்ணய சபையானது கடந்த 1949-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந்தேதி, இந்திக்கு அலுவல் மொழி அந்தஸ்தை வழங்கியது. இதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ந்தேதி இந்தி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு இந்தி திவாஸ் கொண்டாட்டத்தை தொடர்ந்து அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுகின்றன. ஒவ்வொரு மொழிக்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் இருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொதுவாக ஒரு மொழி நிச்சயம் தேவை. அதுதான் சர்வதேச அளவில் இந்தியாவின் அடையாளமாக இருக்கும். அப்படி இந்தியாவை எந்த மொழியால் இணைக்க முடியுமென்றால், அது இந்திதான். அதைத்தான் ஏராளமானோர் பேசுகிறார்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
மக்கள் தங்கள் தாய்மொழியை முடிந்தவரை முன்னிலைப்படுத்துமாறு அழைப்பு விடுத்த அமித்ஷா, அதேநேரம் தேசத்தந்தை காந்தியடிகள் மற்றும் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் ஆகியோரின் ஒரே மொழி கனவை நிறைவேற்ற, இந்தியையும் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.பின்னர் டெல்லியில் நடந்த இந்தி தின நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா அதே கருத்தை வலியுறுத்தினார். அமித்ஷாவின் இந்தி திணிப்பு கருத்துக்கு தமிழகம்,கேரளா,கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நாடுமுழுவதும் எழுந்த எதிர்ப்பைக்கண்டு அஞ்சிய அமித்ஷா தற்போது நான் 2வது மொழியாகத்தான் இந்தியை கற்கச்சொன்னேன் என்று அந்தர் பல்டி அடித்துள்ளார்.
கடும் எதிர்ப்பையடுத்து விளக்கம் அளித்துள்ள அமித்ஷா நான் மாநில மொழிகளை மீறி இந்தியை திணிக்க வேண்டும் என்று கூறவில்லை. தாய்மொழிக்கு பின் இரண்டாவது மொழியாக கற்கும்படிதான் கூறினேன். என்னுடைய பேச்சை தேவையில்லாமல் சில கட்சியினர் அரசியல் ஆக்குகின்றன என்று அந்தர் பல்டி அடித்துள்ளார்.