பேசும் காச்சக்காரம்மன் – 11 சென்றவார தொடர்ச்சி...
ஊர்ஊராக படையெ டுத்துச் சென்ற ஐரோப்பி யக்காரர்களின் படையி லிருந்த லட்சக்கணக்கானோர் மலேரியா நோய் வந்து இறக்க ஆரம்பித்தனர். அவ்வளவு படைவீரர்களுக்கும் வைத்தியம் பார்க்க இந்த சின்கோனா மரப்பட்டை பத்தாமல் போகவே பெரும் கோவில்களில் செயற்கையாக உருவாக்கிய நந்தவனக்காடுகளைப் போல ஐரோப்பியர்கள் எங்கெல்லாம் ஜெயித்துவிட்டு வந்தார்களோ அங்கெல்லாம் சின்கோனா மரங்களை வளர்க்கச் சொல்லி தூது அனுப்பினார்கள். ஆனால் முடியைப் பிடுங்கி திரும்பவும் மண்டையில் நட்டால் வளருமா? வெவ்வேறு சீதோசன நிலை காரணமாக இந்த மரங்களால் மூச்சைப் பிடித்து வளரமுடியவில்லை. இதனால் நொந்துபோன ஐரோப்பியர்கள் இனி இந்த செடி, கொடிகளை நம்பிக் கொண்டிருந்தால் வீரர்கள் அனேகம்பேர் காலியாகிவிடுவார்கள் என்று நினைத்து வேறு வழியில் காய்ச்சலுக்கான மருந்துகளை கண்டுபிடிக்க ஆரம்பித்தனர். அப்போதுதான் சின்கோனா பட்டையிலிருந்து மலேரியாவை குணப்படுத்துகிற குவினைனுடைய மூலக்கூறு வாய்ப்பாட்டை 1854ல் அடோல்ப் ஸ்ட்ரெக்கெர் என்பவர் கண்டுபிடித்தார். இந்த மூலக்கூறினை வைத்துதான் செயற்கையாக மருந்தினை பின்பு வந்த அறிஞர்கள் ஆய்வகங்களில் தூங்காமல் கொள்ளாமல் உருவாக்க ஆரம்பித்தார்கள். அதன் வழியே அதே நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட மாத்திரைகளில் ஒன்றுதான் பாராசிட்டமால். இப்படித்தான் மாத்திரைகளை உருவாக்குதலும் அதை வணிகம் செய்வதும் துவங்கியது.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இப்படி இயற்கை செடிகளிலிருந்து மூலக்கூறு வாய்ப்பாட்டை கண்டுபிடித்து அதன் மருந்து மாத்திரைகளாக ஆய்வகங்களில் ஒருவேளை உருவாக்காமல் இருந்திருந்தால் உலகிலுள்ள அத்தனை மருத்துவ குணமுள்ள தாவரங்களையும் அவர்கள் வணிகத்திற்காக அழித்திருப்பார்கள். இப்போது நம் சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டிருக்கிற மருத்துவச் செடிகள் எதையுமே பார்ப்பதற்கு நமக்கு ஒரு மாதிரி படங்கள்கூட கிடைத்திருக்காது.
1880களில் சின்கோனா பட்டைகள் கிடைக்காமல் போனதும் அதன் தொடர்சியாக பல மருந்துகள் கண்டறியப்பட்டன. மோர்ஸ் என்பவர் 1878ல் பாராசிட்டமால் மாத்திரையை ஆய்வகத்தில் உருவாக்கிக் காட்டினார். அதுவரை கண்டறியப்பட்ட பல காய்ச்சல், வலி மருந்துகளெல்லாம் இரத்த செல்கள் மற்றும் சிறுநீரகத்தை தாக்கி பக்கவிளைவை ஏற்படுத்திக் கொண்டிருந்த நிலையில் இந்த பாராசிட்டமால் கண்டுபிடிப்பு என்பது பெரிய ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்பட்டது. ஆனால் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு கண்டறியப்பட்ட மருந்தைத்தான் நாம் எடுத்த எடுப்பிற்கெல்லாம் தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். பாராசிட்டமால் மாத்திரையை நம் அஞ்சறைப் பெட்டியில் ஒன்றாக சேர்க்கும் அளவிற்கு அல்லவா அதிகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். காய்ச்சல் வந்த பிள்ளையை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் நாம் ஏற்கனவே அசதிக்காக எப்போதோ வாங்கி வைத்த பாராசிட்டமால் மாத்திரையைக் கொடுக்கிறோம். அப்படி இல்லையா, எல்லா ஊரிலும் மருத்துவர்களாகிப்போன பெட்டிக்கடை அண்ணாச்சிகளிடம் போய் மாத்திரையைக் கேட்டு போட்டுக் கொள்கிறோம். அப்படியும் ஊகூம்.. என்றால் இருக்கவே இருக்கிறார் கம்பவுன்டர். அவரிடம் சென்று ஸ்டீராய்டு ஊசியை போட்டுக் கொள்கிறோம். கடைசியாக அப்படியும் இப்படியும் செய்து எதுவும் முடியவில்லை என்றவுடன் மருத்துவமனைக்கு ஓடிவந்து இப்பவே காய்ச்சலைச் சரிபடுத்துங்க என்று புலம்புகிறோம். நாம் காய்ச்சலை சரியாகவே அணுகுவதில்லை என்பதே காய்ச்சலால் நாம் அவதியுறுவதற்கு முக்கிய காரணம் என்று நாம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. பாராசிட்டமால் மாத்திரை மட்டுமல்ல சத்து மாத்திரையே ஆனாலும் வயதிற்கேற்ப, அவர்கள் உடல் எடைக்கு ஏற்ப மாத்திரையைப் பார்த்து கொடுக்க வேண்டியிருக்கும். மேலும் மருத்துவர் கொடுக்கிற பாராசிட்டமால் மருந்தானது குடலுக்குள் சென்று கல்லீரலில் போய் வேலை செய்யவே அரைமணி நேரம் ஆகும். அதன் வேலை நேரமும் சராசரியாக மூன்றிலிருந்து ஐந்து மணிநேரம்தான். அதற்குப் பிறகு அவை கழிவுகளாக சிறுநீர் வழியே வெளியேறிவிடும். ஆகவே காலையில் போட்ட மாத்திரையின் ஐந்து மணிநேர வேலை முடிந்தவுடன் அடுத்த மதியவேளை சிப்டுக்கு பாராசிட்டமால் மாத்திரையை சரியான நேரத்திற்கு போடவில்லையென்றால் மீண்டும் காய்ச்சல் வந்துவிடும்.
ஆனால் நாம் என்ன செய்கிறோம்? ஐந்து நாட்கள் மாத்தரையைப் போடச் சொன்னால் இரண்டு நாட்கள் எடுத்துக் கொள்கிறோம். மூன்றுவேளை கணக்கிட்டு எடுத்துக் கொள்ளச் சொன்னால் ஒருவேளை மட்டும் சாப்பிட்டுவிட்டு மறுவேளை மறந்துவிடுகிறோம். அப்புறம் மாத்திரை போட்டும் காய்ச்சல் சரியாகவில்லையே, ஒரு ஊசியைப் போட்டால்தான் சரியாகும் என்று மருத்துவமனை வரிசையில் வந்து நிற்கிறோம். சிரப், மாத்திரை, ஊசியில் எல்லாம் இருப்பது ஒரே பாராசிட்டமால் மாத்திரைகள்தான். பிறந்த பச்சை குழந்தைக்கு மலப்பகுதியில் வைக்க பிதுக்கு மருந்தாகவும், மென்று விழுங்க முடியாத குழந்தைக்கு சிரப்பாகவும், பெரியவர்களுக்கு மாத்திரையாகவும் கொடுக்கிறார்கள். ஊசி என்பது காய்ச்சலின் வீரியத்தை உடனே குறைத்தாக வேண்டும் என்கிற உடல்நிலையில் வருபவர்களுக்குத்தானே ஒழிய எல்லோருக்குமே போட வேண்டிய அவசியமில்லை என்று யாரும் புரிந்து கொள்வதில்லை.
பாராசிட்டமால் மாத்திரைகளை அதிமாக எடுத்துக் கொண்டால் கல்லீரல் பீஸ் ஆகிவிடும். மது அருந்துபவர்களுக்கு ஏற்கனவே ஆல்கஹால் கல்லீரலை காலி பண்ணுகிற வேலையைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதனால் சாதாரணமாக எல்லாருக்கும் அறிவுறுத்துகிற மாதிரி அளவாக மது அருந்துபவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்காமல் மிகவும் குறைவான மருந்து அளவையே சாப்பிடச் சொல்கிறார்கள். ஆக மது அருந்துபவர்கள் சுயமாக பாராசிட்டமால் சாப்பிடுவதில் அதிக பாதிப்புகள் இருக்கிறது. ஏனென்றால் பாராசிட்டமால் மாத்திரைகளை சுயமாக சகட்டுமேனிக்கு எடுத்துக் கொண்டால் வயிற்றில் அல்சர் வந்து, குடலில் ஓட்டை விழுந்து, வயிற்றில் நீர் வைத்துவிடும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே காய்ச்சல், தலைவலி எதற்குமே மருத்துவர் அறிவுரையோடு பாராசிட்டமால் மாத்திரை போட்டுக் கொள்வதே நல்லது. மேலும் அதனை சரியான அளவில் எடுத்துக் கொள்வதுடன் நேரத்திற்கு மாத்திரையை மறக்காமல் சாப்பிடவும் வேண்டும். மருத்துவர் எத்தனை நாள் அறிவுறுத்துகிறாரோ அத்தனை நாட்கள் முழுவதுமாக மாத்திரைகளை போட்டுக் கொண்டால்தான் எந்தக் காய்ச்சலும் குணமாகும்.
-டாக்டர் இடங்கர் பாவலன்
idangarpavalan@gmail.com